Friday, July 13, 2012

குருவரெட்டியூர் ஸ்ரீ கக்குவாய் மாரியம்மன் முதலாம் ஆண்டு நிறைவு விழா


SRI kakuvai mariamman temple function -2012 GURUVAREDDIYUR


ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் குருவரெட்டியூர்
அருள்மிகு கக்குவாய் மாரியம்மன் கும்பாபிஷேகம்
சென்ற வருடம் நடந்து முடிந்தது .

அதைத்தொடர்ந்து முதலாம் ஆண்டு நிறைவு விழா நந்தன வருடம்

ஆனி மாதம் 26 ஆம் நாள் 10.7.2012 செவ்வாய் கிழமை நிறைவு பெற்று அதிகாலை 5 மணிக்கு காவிரி ஆறு சென்று தீர்த்தம் கொண்டு வந்து காலை 11மணிக்கு யாக வேள்வியுடன் அபிஷேக ஆராதனை பூஜைகள் நடைபெற்றது.

குமாரபாளையம் தவத்திரு அங்கப்பன் சுவாமிகள் அவர்களால் யாக வேள்விகள் செய்யப்பட்டு சிறப்பான அலங்கார பூஜை நடைபெற்றது.

மதியம் 2 மணிக்கு சிறப்பான அன்னதானம் இடப்பட்டு நிறைவு பெற்றது.


குருவரெட்டியூர் பகுதி மக்கள் பலரும் ஆன்மீக அன்பர்களும்
கலந்து கொண்டு ஸ்ரீ கக்குவாய் மாரியம்மன் அருள் பெற்றுச்சென்றனர் .

Saturday, July 7, 2012

திருப்பங்கள் தரும் திருப்பதி ஸ்ரீஏழுமலையான் தரிசனம்




திருப்பங்கள் தரும் திருப்பதி நடைப்பயணம்


கடந்த ஒருமாதங்களுக்கு முன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆசைப்பட்டு திருப்பதி கிளம்பினோம் . 12 வருடங்கள் கழித்து திருப்பதியை பார்க்க விரும்பி எங்கள் கிராமத்தில் இருந்து ஈரோடு ரயில் நிலையம் அடைந்து காட்பாடி ரயில் நிலையம் அடைந்து அங்கிருந்து திருப்பதி ரயில் நிலையம் அடைந்தோம் .


நண்பர் கூறியபடி நடைபாதையாக சென்றால் ஏழுமலையானை எளிதாக தரிசனம் செய்யலாம் என கூற ஓர் ஆட்டோவில் மலைப்பாதை அடிவாரத்தை அடைந்தோம் .

அங்கிருந்து மலையைப்பார்த்தால் மிகப்பெரிய பாறை செந்நிறத்தில் வித்தியாசமாக தெரிகிறது. எளிதான நடைப்பயணம் தான் என ஆரம்பத்தில் சொன்னார்கள் அடிவாரத்திலுள்ள படிகளில் கற்பூரம் கொளுத்தி அங்குள்ள சன்னதியில் வழிபட்டு முதற்படிக்கட்டில் காலடி வைத்தால் வருணபகவான் மழையை பொழிய ஆக அருமையான குளிர்ச்சி திருப்பதி ஏழுமலையான் நாம் வருவதை அறிந்திருப்பார் போலும் சந்தோஷமாக இருந்தது.

படிக்கட்டுகளில் சந்தனம் ,குங்குமம்,மஞ்சள் என பக்தர்கள் வேண்டுகோளுக்கு இணங்க படிக்கட்டில் தடவி கற்பூரம் கொளுத்தி "கோவிந்தா "என பக்தி மயமானது படிக்கட்டுகள் . மழை நீரில் முன்பே படிக்கட்டில் இடப்பட்ட சந்தனமும் ,குங்குமம் ,மஞ்சள் ஆகியவை நம் கால்களை சிவப்பு கலராக்கியது.

தொடர்ந்து பயணத்தை ஆரம்பிக்க ஆங்காங்கே பக்தர்கள் தங்கள் உடற்கடன்களை முடித்துக்கொள்ள பளிச் கழிவறைகள் , இருக்கின்றன. படிக்கட்டை அவ்வப்போது சுத்தம் செய்ய துப்புரவு பணியாளர்கள் என எங்கும் சுத்தம்.

மாலை 4.00 மணிக்கு துவங்கிய நம் பயணம் நடந்து கொண்டே இருந்தோம் . 6. 00 மணியளவில் திருப்பதி தேவஸ்தானத்தால் நமது போட்டோ எடுக்கப்பட்டு தரிசன நேரம் இரவு 12 மணி எனக்குறித்து நடைபாதைபக்தர் எனக்குறித்து அனுப்புகிறார்கள் . ஆங்காங்கே பாதுகாப்பிற்கு ஆந்திர காவலர்கள் இருக்கிறார்கள் .

அங்கிருந்து பல படிக்கட்டுகள் ஏறி ஒரு மணி நேரம் பயணித்தால் நம் போட்டோ அடையாள அட்டையில் ஒரு சீல் வைத்து தருகிறார்கள் .செல்லும் வழிகளில் ஆங்காங்கே ஆழ்வார்கள் சன்னதி சிலைகள் நிறுவி அழகுபடித்தி இருக்கிறார்கள்.ஆங்காங்கே கடைகள் படிக்கட்டுகளில் இருக்கின்றன.

இடையில் ஓர் பெரிய பூங்காவில் நிறைய மான்கள் இயற்கையாக வளர்க்கப்படுகிறது.முகம் மட்டுமே கருப்பாக காணப்படும் ஒருவகை குரங்கு காணப்படுகிறது.சற்று தூரம் பயணித்தால் பெரிய அனுமன் சன்னதி யை காணலாம் .

தொடர்ந்த நம் பயணத்தில் இடையே பர்ஸ் மிஸ் பண்ணிவிட்டேன் என குடும்பத்துடன் காசு கேட்கும் ஏமாற்றுப்பேர்வழிகள் உள்ளார்கள் உஷார். ஏழுமலை கொண்ட அடுக்கில் நீண்டு கொண்டே செல்கிற நம் மலைப்பாதை காணற்கறியது. ஒருவழியாக ஓட்டமும் நடையுமாக 6 மணி நேர நடைப்பயணத்திற்குப் பின் திருமலையை அடைந்தோம் .

இரவு 10 மணிக்கு திருமலைக்கு வந்தோம் . எங்கு பார்த்தாலும் மக்கள் மொட்டைத்தலையில் சுற்றுகிறார்கள் . நன்பரின் திருமலை வேண்டுதலின் படி மொட்டையை போட்டுவிட்டு தரிசனத்திற்காக ஒடிக்கொண்டே இருந்தோம்.இரவு 12 மணிக்கு வரிசையில் பட்டியில் அடைக்காமல் விட்டார்கள் .

கியு போய்கொண்டே இருந்தது லட்டு டோக்கன் கொடுத்தார்கள் பின் இராஜ கோபுரம் வணங்கி பக்தர்கள் வெள்ளத்தில் தங்கத்தகடுகளால் வேயப்பட்ட கூறைகள் அழகானது .


சரியாக இரவு ஒருமணிக்கு ஸ்ரீ வெங்கடேசப் பெருமானின் தரிசனம் கிட்டியது. சரியாக 1 நிமிடம் மட்டுமே ஸ்ரீஏழுமலையானை பார்க்க முடிந்தது. பிரகாசமனம் முகம் .தக தக வென உடல் அருமையான தரிசனம் .

வைணவத் திருத்தலங்களில் ஓர் சிறப்பான ஸ்தலமாகும் . தினமும் நம்மைபோல லட்சக்கணக்காண மக்கள் தரிசனம் செய்ய வேண்டி உள்ளதால் நாமும் ஸ்ரீ பெருமாளை வணங்கியதும் அடுத்தவர்களுக்கு வழிவிடுவதே முறை.

நீண்ட விடுமுறைக்கு பின் திருப்பதி திருமலையின் ஏழுமலையானை நிறைவான தரிசனம் செய்து வந்தோம் .

திருமலையில் ஏழுமலையான் குறித்த சில விபரங்கள் :

மூலவர் :ஸ்ரீ வெங்கடேசப்பெருமாள்

வேறுபெயர்கள் : திருவேங்கடம், ஏழுமலையான் ,

சிறப்புகள் : பழங்காலத்தில் கி.மு 500 முதல் 300 வரையிலான காலத்திய வரலாறு தமிழ் நூல்களான சிலப்பதிகாரம் மணிமேகலையில் திருவேங்கடம் என சிறப்பாக திருப்பதி அழைக்கபடுகிறது.

வைணவ திவ்யதேஷங்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக திருப்பதி போற்றப்படுகிறது.

அமைப்பு :
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம்

பன்னாட்டு விமான நிலையம் :சென்னை

பிரசாதமாக காப்புரிமை பெற்ற லட்டு வழங்கப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையானுக்கு வருடம் முழுவதும் பச்சைக்கற்பூர அபிஷேகம் நடைபெறுகிறது.

முடிவுரை :

திருப்பதி மலையில் காணப்படுகிற சிலாதாரா எனப்படுகிற பாறைகள் 250 கோடி ஆண்டுகள் முந்தையது என ஆய்வில் கூறியுள்ளனர் .
ஒரு பக்கத்தில் அடுக்க முடியாத சூட்சம சக்தியான
ஸ்ரீ வெங்கடேசப்பெருமானது அற்புதங்கள் ஏராளம் .
பகிர்ந்தவனும் பகிர்ந்ததும் சிறிய அளவே .நன்றி

Sunday, June 17, 2012

ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோவில். கல்வடங்கம். சங்ககிரி வட்டம்





கல்வடங்கம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி

SRI ANGALAPARAMESWARI TEMPLE, KALVADANGAM


அமைவிடம் :

சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்தில் அமைந்துள்ள பழங்கால திருக்கோவில்களில் ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோவில் ஒன்றாகும். எடப்பாடியில் இருந்து 11 கி.மீட்டர் தொலைவில் திருக்கோவிலைக் காணலாம் கொமராபாளைத்தில் இருந்து எடப்பாடி செல்லும் வழியில் திருக்கோவில் அமைந்துள்ளது.

மூலவர் :

ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோவில் திருக்கோவில் முகப்பில் பழங்கால தேர் நிற்க ரசித்து முன்னே சென்றால் பிரமாண்டமான ராஜ கோபுரம் தரிசித்து உட்பிரகாரம் சென்று நீண்ட கொடிமரம் அதைதொடர்ந்து காவல் தெய்வங்கள் வணங்கி உள்ளே சென்றால் மூலவர் ஸ்ரீ அங்காள பரமேஷ்வரியை வணங்கலாம் .

அழகிய அம்சங்கள் பொருந்தி பலர் வாழ்வில் ஏற்றம் அளித்த அழகிய அம்மன் . மூலவர் அருகில் பழங்காலத்தில் இருந்து காணப்படும் பாம்பு புற்று உள்ளது. திருக்கோவில் ஷ்தல மரமாக வில்வம் அமைந்துள்ளது. அருகே பிரமாண்ட அரசமரம் அமைந்துள்ளது.

இப்பகுதி மக்களால் விரும்பி வணங்குகின்ற பழங்காலத்திய காண வேண்டிய சக்தியான அம்மனாகும் ,வெள்ளிக்கிழமை, அமாவசை நாட்களில் கூட்டம் அலைமோதுகிறது.

முடிவுரை:

காண வேண்டிய தரிசிக்க வேண்டிய ஆலயங்களில்

கல்வடங்கம் ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோவிலும் ஒன்றாகும் .

Sunday, June 10, 2012

நட்பே நலமா.!


பிரியமிகு நட்பே.. !!

ஆயிரமாயிரம் சோதனைகள்
கடந்து வந்திருக்கும்
நம் நட்பு...!

உனக்கு கணவனும்
எனக்கு மனைவியுமாய்
வந்து நாம் விரும்பிய
வாழ்வை மலர வைத்திருக்கலாம் ..!

பதினாறு பக்கங்களாக
நட்பை பலமாக்கிய
நம் கடிதங்களின்
நட்பை யாரும்
புரியாமலிருக்கலாம் .,!

காலம் ,
நேரமின்மை
உன் குழந்தைகளால்
நம் நட்பை வளப்படுத்த
முடியாமையால் தவறிப் போயிருக்கலாம் .!

இழந்த போன நட்பே.. !
எனக்காக நீ
அனுப்ப வேண்டியது
மடல் மட்டுமல்ல ..!
நீ மறந்த நம் நட்பின்
பசுமையான
நினைவுகளையும் தான் ..!

Friday, June 8, 2012

சொல்லி விடு


அன்பே ... !
இப்போது எனக்காக
சொல்ல வில்லை
என்றாலும் கூட
பராவாயில்லை...!
உனக்காக கடைசி
இதயம் சாகும்
போதாவது சொல்லி விடு...!
உன் காதலை...!

Friday, June 1, 2012

அன்னதானம்



பல்வகையான தானங்கள் நம் முன்னோர்கள் இயம்பி விட்டுச்சென்றுள்ளார்கள் . அதில் முதன்மையானது அன்னதானம் . உயிர்கள் வாழ அடிப்படையானது உணவு.உயிர் உணவை ஆதாரமாகக்கொண்டது. ஆக உணவு கொடுத்தவன் உயிர் கொடுத்ததற்கு ஒப்பானவன் ஆகிறான் .

ஒருவன் தன் உயர்வுக்கு எப்போதும் அன்னத்தை தாணமாக கொடுத்தல் வேண்டும் . அப்போதே சராசரி மனிதரிடத்தில் இருந்து வேறுபட்டு உயர்ந்த மதிப்புமிக்க மனிதனாகிறான் .

சரி அன்னதானம் செய்பும் முடிவிற்கு வந்தாயிற்று அதற்கு எந்த திருக்கோவிலில் அன்னதானம் இட்டால் உயர்வான பலன் கிட்டுமென பலங்கால நூல்கள் என்ன சொல்கின்றது.

அன்னதானத்தால் உயர்வான பலன் கிட்ட :

பிற திருக்கோவில்களில் லட்சம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் காசியில் ஒருவருக்கு அன்னதானம் செய்த பலனும் ,

புண்ணிய பூமியான காசியில் ஒருகோடி பேருக்கு அன்னதானம் இட்ட பலன் திருவண்ணாமலையில் ஒருவர்க்கு இட்டதற்கு சமமாகும் . திருவண்ணாமலையில் செய்யும் அன்னதானத்திற்கு சமமான பலன் இல்லை. அதிலும் துவாதசி திதியில் அன்னதானம் செய்வது மிக விஷேசமாகும் என சிவமகாபுராணம் உண்மையாகும் .

வேறுவகை அன்னதானங்கள் : எறும்புகளுக்கு அரிசி கோலத்தால் கோலமிட்டு உணவிடுவது. பசுக்களுக்கு அகத்திக்கீரை,புல்,பழம் கொடுப்பதால் பல தோஷங்கள் நிவர்த்தியாகிறதாம் .

முடிவுரை :

அருணாசல மகா சிவபுராணம் உணர்த்துகிற துவாதசி நாளில் முடிந்தவரையில் யாரேனும் ஒருவருக்காவது திருவண்ணாமலையில் அன்னதானம் செய்து சொர்க்கத்தில் இடம் பிடிப்போம். அப்படி முடியாதபோது நமது ஊர்களில் நடைபெறும் கோவில் திருவிழாக்கள் ,கும்பாபிஷேகங்களில் அன்னத்தை தானமாக கொடுப்போம் .

போதும் போதும் என மனிதனை மன நிறைவு செய்வது அன்னதானம் மட்டும் தானே.. ! நன்றி

சித்தர்கள் சொல்லிச்சென்ற தத்துவங்கள்


சித்தர்கள் தங்கள் வைத்திய முறைக்காகவும் யோக நெறிக்காகவும் 96 தத்துவங்களை அறிந்து பயன்படுத்தி வந்துள்ளனர். அவற்றில் சிலவற்றை நாம் அறிந்திருந்தாலும் சில அடிப்படை விஷயங்கள் அறிந்திராமல் உள்ளதால் அறிந்து கொள்ள வேண்டி பதிவிட்டுள்ளேன் .



அறிவு 1 - கருத்துச்செயல்பாடு

வினைகள் 2- நல்வினை,தீவினை

முக்குற்றங்கள் 3- வாதம் பித்தம் ,சிலேத்துமம்

குணம் 3-சாத்வீகம் ,தாமஷம்,ராட்ஷசம்

ஈடணை 3-தாரேட்சணை,புத்ரேட்சணை,விரேட்சணை

மலம் 3-ஆணவம் ,கன்மம் ,மாயை


மண்டலம் 3- சூரியன் ,சந்திரன், அக்னி

கரணம் 4- மனம் ,புத்தி, சித்தம் ,அகங்காரம்

பூதம் 5-மண் ,நீர் ,நெருப்பு,காற்று ஆகாயம்

பொறி 5- மெய்,வாய் ,கண்,மூக்கு செவி

புலன் 5- வாய்,கால் ,கை,குதம் ,குறி

கண்மேந்திரியம்
5- வாக்கு,பாணி,பாதம் ,பாயு ,உபஸ்தம்

ஞானேந்திரியம் 5- உணர்வு,அறிவு,வெபம் ,தாக்கம் ,மெய்

ஆசையம் 5-மலம், விந்து,சிறுநீர்,சத்து,உணவு ஆகிய ஐந்தும் தங்கும் இடங்கள்

கோசம் 5-ஆகாரமையம் ,விஞ்ஞானமையம் ,மனோமயம் ,பிராணமயம் ஆனந்தமயம்

அவஸ்தை 5-சொப்பணம்,சுக்கிரம் ,கமுத்தி,துரியம் ,துரியாநிதம்

ஆதாரங்கள் 6-மூலாதாரம் ,சுவாதிட்டானம்,மணிபூரகம் ,
அனாகதம் ,விசுத்தி,ஆன்ஞேயம்

இராகம் 8- காமம் ,குரோதம் ,லோபம் ,மதம் ,
மோகம் ,ஆச்சர்யம் ,இடும்பை,பொறாமை

நாடி 10-இடகலை,பிங்கலை.கழுமுனை, கண்டம் ,
அட்சி,கந்தாரி,சுத்தி, அலம்புடை,சங்கினி,குரு

வாயு 10- பிராணன் ,அபானன் ,வியானன் ,உதானன் ,சமானன் ,
நாகன் ,கூர்மன்,கிரிகரன் ,தேவதத்தன் ,தனஞ்செயன்

Saturday, May 19, 2012

திருமுருகர் அவதரித்த வைகாசி விசாக நட்சத்திர வழிபாடு


தமிழ்கடவுள் முருகப்பெருமான் இந்துக்களால் விரும்பி வணங்கப்படுகிற கடவுள் . இறைவழிபாட்டில் முக்கிய விஷேச நாட்களை தேர்ந்தெடுத்து அந்த திதி ,நாட்கள் ,நட்சத்திரங்கள் , ஓரைகளை கணக்கிட்டு வணங்கினால் கண்டிப்பாக பலன் நிச்சயம் . அவ்வாறு முருப்பெருமானுக்கு தைப்பூசம் ,மாசிமகம் ,பங்குனி உத்திரம் , ஆடிப்பூரம் , இப்படி வருகின்ற நட்சத்திர நாட்களில் வைகாசி விசாகம் மிக முக்கியமாக முருகர் வழிபாட்டிற்கு உரிய நாளாகும் .

2012 ஆண்டிற்கான வைகாசி விசாக நாள் வரும் 03.06.2012 வைகாசிமாதம் 21 நாள் ஞாயிற்றுக்கிழமை நாளில் வருகிறது. அன்றைய தினம் உங்களுக்கு அருகில் உள்ள ஏதேனும் ஓர் திருமுருகர் ஆலயத்தில் வழிபாடு செய்வதின் மூலம் வளர்ச்சிகள் கைகூடும் .



வீட்டில் வணங்குவது எப்படி :


அன்றைய தினம் வீட்டை சுத்தம் செய்து சாணத்தால் மெழுகி விரதமிருந்து வீட்டில் பூஜையறையில் உள்ள முருகப்பெருமான் படத்தை சுத்தம் செய்து வைத்து

5 முக விளக்கில்
5 வித எண்ணெய் ஊற்றி
5 வித பூக்கள் ஒருசேரகட்டி
5 விதமான பழங்கள் வாங்கி வைத்து நைவேத்தியமாக்கி'
முருகருக்கு பிடித்த கந்தரப்பத்தை செய்து படைத்து

முருகருக்கு பிடித்த மாம்பழத்தையும் படைத்து அருகே முழுமுதற்கடவுளான விநாயகருக்கு கற்பூர தீபாராதனை காட்டி பின் முருகப்பெருமானுக்கு தீபம் காட்டி கந்தர்சஷ்டி கவசம் ,கந்தர் அநுபூதி, கந்த குரு கவசம் பாடி ,கேட்டு ,படித்து வழிபட தமிழ் கடவுள் முருகர் நம் வீட்டில் வந்து இறங்கி நம்மைக்காப்பது கண்கூடு.

பின் ஏதேனும் ஓர் முருகரின் ஆலயம் சென்று வழிபாடு செய்து வசதியிருப்பின் பக்தர்கள் தாகம் தீர்க்க மோர் ,தண்ணீர் ,தானமாக தர நம் குலம் தழைத்து மேலோங்கும் என்பது பெரியோர்கள் வாக்கு .அன்றைய தினம் திருமுருகர் ஆலயத்தில் செல்லும்போது செந்நிற மலர்கள் , நெய் (விளக்கேற்ற) அபிஷேகப்பொருட்களுடன் செல்வது சிறப்பு.'

ஜோதிடத்தில் பூமிகாரகன் எனச்சொல்லப்படுகிற செவ்வாய்க்கு அதிபதி முருகப்பெருமான் ஆவார் . எனவே வீடுகட்ட ,இடம் வாங்க ,நிலம் வாங்க செந்நிற பொருட்கள் வாங்குவோர் விற்போர் , ரியல் எஸ்டேட் போன்ற தொழில் செய்பவர்கள் அதிகாரத்திற்குரிய வேலைக்கு செல்ல வேண்டி விரும்புபவர்கள் ஆகியோர் முருகரை வழிபட்டால் மேன்மேலும் வளர்ச்சி கூடும் .

முடிவுரை :

திருமுருகரை முறையாக வழிபாடு செய்ய வழிவகுக்கவே இந்தப்பதிவு. வசதியில்லை என்னால் படைக்க இயலாது என்று எண்ணுபவர்கள் ஏதேனும் ஓர் முருகர் ஆலயம் சென்று வழிபடுங்கள் .ஏனெனில் இறைவன் நீங்கள் திருக்கோவில் வரவேண்டும் என்பதையே விரும்புகிறார் . நன்றி

Wednesday, May 16, 2012

பழமுதிர்சோலையின் அழகிய நூபுரகங்கை தீர்த்தம்



நூபுரகங்கை தீர்த்தம் :


மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் அழகர் மலையில் முருகரின் ஆறாம் படை வீடான பழமுதிர்சோலையும் ஒன்று .பழமுதிர்ச்சோலைக்கு வரும் பக்தர்கள் குளிக்க இயற்கையாகவே முருகப்பெருமானால் உருவாக்கப்பெற்ற கங்கையாக நூபுரகங்கை தீர்த்தம் விளங்குகிறது.

வருடம் முழுவதும் மூலிகைகள் கலந்து வரும் நூபுரகங்கை தீர்த்ததில் நீராடுவதால் பல தோஷங்கள் நிவர்த்தியாகி நம் உடல் புனிதத்துவம் பெற்று ஆரோக்கியமாவது உறுதி. திருக்கோவில் ஊழியர்களால் வரிசையாக டிக்கெட் கொடுக்கப்பட்டு வாளியில் விரும்பும் அளவிற்கு ஊற்றுகிறார்கள் . மிகுந்த சுவையுடைய நூபுர கங்கை தீர்த்தத்தை பலர் வீட்டிற்கு எடுத்துச்செல்கிறார்கள் .

அருணகிரி நாதர்பாடல் :

சோலைமலை என அழைக்கப்படும் பழமுதிர்ச்சோலையில் இருந்து சுமார் 500அடி தூரத்தில் இருக்கும் நூபுரகங்கை தீர்த்தத்தை அருணகிரிநாதர் தமது சோலைமலை திருப்புகழில்

" ஆயிர முகங்கன் கொண்ட நூபுர மிரங்கு கங்கை"

என்று வர்ணிக்கிறார் .இதன் பொருள் ஆயிரம் முகங்கள் கொண்ட நூபுரம் இறங்கும் கங்கை எனலாம் . பாட்டுச்சித்தர் ஸ்ரீ முருகப்பெருமானின் பூரண அருட்கடாச்சம் பெற்ற ஸ்ரீ அருணகிரி நாதரே சொன்ன பிறகு அதன் மகத்துவத்தை நாம் உணரவேண்டும் .

மிகவும் பழமை பொருந்திய நூபுரகங்கைக்கு சிலம்பாறு என்ற பெயரும் உண்டு. நூபுரகங்கை தீர்த்தத்தில் பல நோய் தீர்க்கும் காரணிகள் மூலிகைகள் உள்ளதாக சொல்கிறார்கள் . இரும்புச்சத்தும் ,கால்சிய சத்தும் ,தாமிரசத்துக்கள் அடங்கியுள்ளதாக பலர் கருத்து . எங்கிருந்து தொடங்குகிறது என்பதே தெரியாமல் நூபுரகங்கையில் குளித்து விட்டு வந்தோம் .எமக்கு உண்மையாகவே புத்துணர்ச்சி கிடைத்ததால்தான் இந்தப்பதிவு.

நாங்கள் நன்பர்களுடன் சென்றபோது பழமுதிர்சோலையில் இறங்கி சற்றுதூரம் சென்றதும் சிறு சிறுகடைகள் சுமார் 100படிகட்டுகள் ஏறிச்சென்றால் இரண்டு விதமான டிக்கட் விற்கிறார்கள் . அதில் ஸ்பெசல் கியூவில் சென்றால் நன்றாக 15 வாளி வரை ஊற்றுகிறார்கள். நன்றாக குளிக்கலாம் . அற்புதமான இடம் .

ஸ்ரீராக்கியம்மன் சன்னதி:

ஸ்ரீ ராக்கியம்மன் சன்னதி நூபுரகங்கை தீர்த்தம் அருகில் உள்ள காக்கும் கடவுளாகும் .அம்பாளின் திருவுருவம் போல இருக்கும் சன்னதியில் தரிசித்து விட்டு சற்றே பள்ளத்தில் உள்ள நூபுரகங்கை தீர்த்தத்தை எட்டிப்பார்த்துவிட்டு அருகேயுள்ள பழமுதிர்சோலை ஸ்ரீ வள்ளி தெய்வானை உடனமர் சுப்பிரமணியரை வணங்கி விட்டு வந்தோம் .

முடிவுரை: பழமுதிர்சோலை பற்றிய முந்திய பதிவில் எப்படி பழமுதிர்சொலை செல்வது என அறிந்து கொள்ளவும் .அழகர்மலையும் ,பழமுதிர்சோலையும் நூபுரகங்கை தீர்த்தமும் மதுரை மக்களுக்கு கிடைத்த பொக்கிசங்கள் நன்றி.

ஸ்ரீமுருகரின் ஆறாம் படைவீடு பழமுதிர்ச்சோலை தரிசனம்



பழமுதிர்ச்சோலையில் அருள்பாலிக்கும்

ஸ்ரீ வள்ளி தெய்வானை உடனமர் ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்கோவில்



பழமுதிர்சோலையின் முருகரை வணங்க துதி :

"எழுமுதி ரைப்புனத்து இறைவி முன்புதன்
கிழமுதிர் இளநலங் கிடைப்ப முன்னவன்
மழமுதிர களிறென வருதல் வேண்டிய
பழமுதிர் சோலையம் பகவற் போற்றுவாம் ."

அமைவிடம் :

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் அழகர் கோயில் நடுமலையில் பழமுதிர் சோலை அமைந்துள்ளது. மதுரையின் சிறப்புகளில் ஒன்றாக விளங்கும் பழமுதிர்சோலை அறுபடைவீடுகளில் ஆறாவது படை வீடாகும் .

முதல் படைவீடான திருப்பரங்குன்றம் மதுரையில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது இது முருகரின் முதல் படை வீடாகும் .முருகப்பெருமானின் இருபடை வீடுகளை தன்னகத்தே கொண்டுள்ள மதுரை ஒர் அற்புத ஆன்மீக நகராகும் .

மூலவர் :

ஸ்ரீ வள்ளி தெய்வானை உடனமர் ஸ்ரீ சுப்பிரமணியர்

ஸ்தல விருட்சம் : நாவல் மரம்

ஔவைக்கு ஸ்ரீ முருகர் காட்சி தந்து நாவற்பழம் கொடுத்த இடம் . இது ஐப்பசிமாதத்தில் மட்டுமே பழம் பழுக்கும் .மற்ற நாவல் மரங்கள் ஆடி ஆவணிமாதத்தில் மட்டும் பழம் பழுக்கும்

தீர்த்தம் :

நூபுர கங்கை தீர்த்தம்

திருக்கோவில் சுற்றியுள்ள சன்னதிகள் :


முழுமுதற் கடவுளாம் அருள்மிகு வித்தக விநாயகர் தரிசனம் செய்து பின் மூலவரான வள்ளி தெய்வானை உடனமர் ஸ்ரீ சுப்பிரமணியர் தரிசித்து ஸ்ரீ ஆதிவேல் உற்சவர் வணங்கி பின் ஸ்ரீ நாவல் மரத்தடி விநாயகரை பார்த்து வரலாம் .

பழமுதிர் சோலை செல்லும் வழிகள் பஸ் வசதிகள் :

மதுரையில் இருந்து அழகர் கோவில் 20 கி.மீட்டர் தொலைவில் கடந்து அழகர்மலை அடிவாரத்தில் இருந்து திருக்கோவில் நிர்வாகத்தால் இயக்கப்படும் சிற்றுந்தின் மூலம் 20நிமிட பயணத்தில் பழமுதிர்ச்சோலையை அடையலாம் .

மதுரையில் இருந்து அழகர்மலை செல்ல காலை 05.00மணியில் இருந்து இரவு 10.00 மணிவரைகள் பஸ்கள் உண்டு. அழகர் மலையில் இருந்து பழமுதிர்சோலை செல்ல திருக்கோவில் நிர்வாகத்தின் பஸ் காலை 06 .00மணி முதல் மாலை05.00மணி வரை பேருந்துகள் இயக்கப்படுகிறது.

பூஜை முறைகள் :

மூன்றுகாலப்பூஜைகள் பழமுதிர்ச்சோலையில் நடைபெறுகிறது.
காலை அபிஷேகபூஜை 09.00 மணிக்கும்
உச்சிகால பூஜை 12.00மணிக்கும்
மாலை அபிஷேகபூஜை 05.00மணிக்கும் நடைபெறுகிறது.
திருக்கோவில் காலை 0600மணிமுதல் மாலை
0600மணி வரை திறந்தே இருக்கும் .

பழமுதிர்ச்சோலையின் சிறப்புகள் :

அழகர்மலையின் அடிவாரத்தில் காக்கும் கடவுள் ஸ்ரீ திருமாலின் வைணவத் திருக்கோவில் அமைந்துள்ளது. மலையின் மேலே பழமுதிர்சோலையில் ஸ்ரீ முருகர் (சைவம் )குடிகொண்டுள்ளார் .

சைவ,வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஸ்தலம் . மாமனாகிய திருமாலும் மருமகனாகிய ஸ்ரீமுருகரும் இணைந்த ஸ்தலம் . பழமுதிர்சோலை வருபவர்கள் அழகர் மலையில் திருமாலை வணங்கி விட்டு பின்னர் பழமுதிர்ச்சோலை வருவதே சிறப்பாகும் .

ஆறாம் படை வீடு ,மாட்டுக்கார சிறுவனாக வந்து அவ்வையார்க்கு நாவல் பழம் கொடுத்து காட்சி தந்த ஸ்தலம் . பாடல் பெற்ற ஸ்தலம் .அழகிய கண்ணனும் அழகன் முருகனும் ஆட்சி செய்வதாலேயே இது அழகர் மலையானது. கந்தபுராணம் இயற்றிய கச்சியப்பர் வியந்து பாடிய ஸ்தலம் .

அருணகிரி நாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற ஸ்தலம் , திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் போற்றிப்புகழ்ந்த அழகு மிகு மலையில் அமைந்துள்ள அற்புத ஸ்தலமே பழமுதிர்சோலையாகும் .

ஸ்தலத்தின் வேறுபெயர்கள் :

சோலைமலை, பழமுதிர்ச்சோலை, குலகிரி,குலமலை, விருஷபகிரி,

முடிவுரை :

பழமுதிர் சோலை வருகின்றவர்கள் நூபுரகங்கை தீர்த்தத்தில் குளித்து மாற்றிக்கொள்ள ஏதுவாக மாற்றுத்துணிகளுடன் வந்தால் நூபுரகங்கையில் குளித்து விட்டு ஸ்ரீ முருகப்பெருமானை 500மீட்டர் நடந்து வந்து ஸ்ரீ பழமுதிர்ச்சோலையில் முருகப்பெருமானை வணங்கலாம் .

நூபுரு கங்கை தீர்த்தம் பற்றி நிறைய தகவல்கள் அடுத்த பதிவில்

வாழ்நாளில் ஒரு முறையேனும் ஆறாம்படை வீடான பழமுதிர்ச்சோலயில் அருள்பாலிக்கும் ஸ்ரீ முருகரை வணங்கி செல்லுங்கள் .

கருத்துரையிடுங்கள் நன்றி

திருப்பரங்குன்றம் ஸ்ரீதெய்வானை உடனமர் சுப்பிரமணிய சுவாமி ஆலய தரிசனம்



திருமணத்தடை தீர்க்கும்

திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்




துதி :

ஒரு முருகா என்று என் உள்ளங்குளிர உவந்துடனே
வருமுருகா என்று வாய் வொருவா நிற்பக் கையிங்ஙனே
திருமுருகா என்று தான் புலம்பா நிற்கும் தையல் முன்னே
திருமுருகாற்றுப்படையுடனே வரும் சேவகனே !

அமைவிடம் :

தமிழ்சங்கம் வளர்த்த மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் மதுரைக்கு தென்மேற்கில் சுமார் 7 கி.மீட்டர் தொலைவிலும் மதுரையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளது.

திருக்கோவில் அமைப்பு :

சுமார் 300அடி உயர பாறையின் அடியில் அமையப்பெற்ற அழகிய குடவரைக்கோவிலாகும் . மூலவர் : திருமுருகன் தெய்வானையுடன் திருமணம் நடைபெற்ற இடம் . இங்கு முருகப்பெருமான் தெய்வானை திருமணத்திருக்கோலத்தில் அமைந்திருக்கிறார் . ஸ்ரீ முருகர் திருப்பரங்குன்றத்தில் தவம் செய்ததாக புராணங்கள் இயம்புகின்றன.

மூலவரும் உடனுறை மூர்த்திகளும் :

ஸ்ரீ பரங்கிநாதர் (சிவலிங்கம் )
ஸ்ரீ கற்பக விநாயகர் ,
துர்க்கை ( கொற்றவை )
ஸ்ரீதேவிபூதேவி உடனமர் பெருமாள் ,
மூலவர் தெய்வானை உடனமர் ஸ்ரீ சுப்பிரமணியர்

ஆகிய ஐந்து மூர்த்திகளும் தனித்தனி கருவறைகளில் ஒரே மண்டபத்தில் அருள்பாலிக்கின்றனர் . குகைக்குள் உள்ள குடவரைக்கோவில் வித்தியசாமான ஆன்மீக அனுபவம் .

புராணக்கதை :

சூரபத்மனை அழித்தமையால் இந்திரன் தன் மகளான தெய்வானையை மணம் செய்து வைக்க திருப்பரங்குன்றத்தில் ஆசைப்பட்டு தேவர்கள் ,நாரதர் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க ஸ்ரீ முருகப்பெருமான் தெய்வானையை இத்தலத்தில் மணம் புரிந்து முருப்பெருமான் உறையும் அறுபடை வீடுகளில் முதல் படைவீடாக சிறப்பிடம் பெற்று விளங்குகிறது.

திருப்பரங்குன்றத்தின் சிறப்புகள் :

1. பாண்டிய நாட்டில் பாடல்பெற்ற 14 சைவத்திருத்தலங்களில் ஒன்று
2. ஸ்ரீ முருகர் தெய்வானையுடன் திருமணக்கோலத்தில் இங்கு மட்டுமே காணலாம்
3. பாறையில் செதுக்கப்பட்ட ஒரே குடவரைக்கோவில்
4. ஆறுபடைவீடுகளில் முதல் படை வீடு
5.இரட்டை விநாயகர் சிலைகள்
6. மூர்த்தி,ஸ்தலம் ,தீர்த்தம் ஆகிய முச்சிறப்புகளையும் கொண்டது
7. தேவாரம் கூறும் சைவத்திருத்தலங்கள் 275ல் ஒன்று
8. முருகர் அமர்ந்த நிலையில் காணப்படும் சிறப்பு
9 .சிவபெருமானும் முருகரும் இணைந்து காணப்படுவதால் "தெற்கு கயிலாய மலை " என கூறப்படும் சிறப்பு

10.போகர் சாப விமோசனம் பெற்ற ஸ்தலம்
11. பாராசுர முனிவரின் மகன்கள் சாபம் நீங்கப்பெற்ற ஸ்தலம் என கண்ணுக்கு தெரியாத பல்வேறு சிறப்புகளை அற்புதங்களை நிகழ்திய ஸ்தலமாகும் .

சான்றுகள் :

சமண முனிவர்கள் இங்கு பஞ்சபாண்டவர்கள் குகையில் தங்கியிருந்ததற்கான சான்றுகள் 3 ஆம் நூற்றாண்டின் பிராமி எழுத்துக்கள் இன்றும் உள்ளதாம் . புராணங்காலங்களில் இருந்து புகழ்பெற்றுவந்த திருப்பரங்குன்றத்தை பாண்டிய மன்னர் நெடுஞ்சடையான் பராந்தகன் கி.பி 765- 815 ல் உருவாக்க முனைந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றது.

ஸ்தலமரம் : கல்லத்தி மரம்

லட்சுமி தீர்த்தம் :

திருக்கோவில் வளாகத்தில் அமைந்துள்ள பெரிய குளமாகும் . அழகிய மீன்களுக்கு மக்கள் இங்கே விற்கப்படும் பொறிகளை இறைத்து வருகின்றனர் .

திருப்பரங்குன்றதை வியந்து பாடல் பாடியவர்கள் :

திருஞானசம்பந்தர் ,ஸ்ரீ சுந்தரர் ஆகியராலும் தேவாரப்பதிகளில் பாடப்பெற்றும் குமரகுருபரர் ,நக்கீரர்,பாம்பன் சுவாமிகள் ,அருணகிரிநாதரால் பாடல் பெற்ற ஸ்தலம் .

பூஜை நடைபெறும் நேரங்கள் :

கோபூஜை -5..00மணிக்கு துவங்கி உச்சிகாலம் பூஜை12.30வரையிலும் மாலை சாயரட்சையில் 05.30க்கு துவங்கி இரவு 9.30க்கு பள்ளியறை பூஜைகளுடன் முடிவுகிறது.

திருவிழா :

வைகாசி மாதத்தில் வைகாசி விசாக தினம், பங்குனி உத்திரம் ஆகிய இந்துக்களின் அனைத்து விஷேச தினங்களும் முருகப்பெருமானுக்குரிய விஷேச பூஜைநாட்களும் உகந்தது. வெளியூர் பக்தர்கள் எல்லா நாட்களிலும் அருள் வேண்டி வருகின்றனர் .

முடிவுரை :

ஏழு நிலை இராஜகோபுரங்களுடன் 12 தீர்த்தங்களுடன் ஸ்ரீ முருகப்பெருமான் தெய்வானையுடன் மணக்கோலத்தில் புரிகிறார் . இங்கே வழிபடுபவர்கள் நல்ல மணவாழ்வு அமைந்து மங்கள இசை கேட்கலாம் திருமண வரம் கிட்டும் .

திருப்பரங்கிரி,சுமந்தவனம் ,கந்தமாலை ,சுவாமிநாதபுரம் ,தென்பரங்குன்றம் ,தண்பரங்குன்றம் என்று அழைக்கப்படும் திருப்பரங்குன்றத்தை திருப்பரங்குன்ற நாதனை வணங்கி மங்களம் உண்டாக வாழ்த்துக்கள் .

ஓம் முருகா சரணம் முருகா

Thursday, May 10, 2012

குன்றி மலைச்சாரலில் அமைந்த குண்டேரிப்பள்ளம் அணைக்கட்டு




குண்டேரிப்பள்ளம் அணைக்கட்டு



ஈரோடு மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டுகளில் பார்க்கவேண்டிய அணைக்கட்டில் குண்டேரிப்பள்ளம் அணைக்கட்டும் ஒன்றாகும் .பெரிய அளவில் இல்லை என்றாலும் சிறிய அளவில் அழகு மிகுந்து சுற்றிலும் மலைகள் பச்சைப்பசேல் என இருக்க இயற்கையாகவே அமைதி நம்மை தொட்டுச்செல்கிறது.

அமைப்பு :

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் கொங்கம்பாளையம் அருகே அமைந்துள்ளது.

எப்படி செல்வது :

சத்தியமங்கலத்தில் இருந்து அத்தாணி செல்லும் வழியில் வாணிப்புத்தூரில் இருந்து சுமார் 7 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கொங்கர்பாளையம் வரை செல்ல பஸ் வசதி உண்டு.ஆனால் அடிக்கடி குண்டேரிப்பள்ளம் அணை செல்ல பஸ் வசதி இல்லை. கார் அல்லது இருசக்கர வாகனத்தில் செல்வது நல்லது. பெரிய எதிர்பார்ப்புகளுடன் சென்றால் ஏமாற்றமே மிஞ்சும் .

விளக்கோம்பை , குன்றி மலையில் பெய்கின்ற மலைநீர் சேகரிக்கப்படும் இடமாக குண்டேரிப்பள்ளம் திகழ்கிறது. சுமார் ஒரு கி.மீட்டர் தூரமுள்ள அணைக்கட்டின் மேல் சாலையில் நடந்து சுற்றிலும் மலைகள் ரசிக்கலாம் .குண்டேரிப்பள்ளம் அணையை பார்க்க வருபவர்கள் உணவுப்பொருட்கள் கொண்டு வருவது நல்லது. இங்கு உணவுக்கடைகள் கிடையாது.

யானைகள் :

மாலை நேரத்தில் தண்ணீர் குடிக்க யானைகள் கூட்டம் இங்குள்ள நீர்பிடிப்பு பகுதிக்கு வருவதுண்டாம் .அணையின் மேல் இருந்து பார்க்கலாம் என சொன்னார்கள் . நீங்கள் யானையை பார்த்தால் பின்னூட்டம் இடுங்கள் .

முடிவுரை :

ஒருநாள் பயணத்திற்கு ஏற்ற இடம் . அமைதியை தேடிச்செல்ல அழகிய இடம் . ஞாயிற்றுக்கிழமைகளில் மிதமான கூட்டம் இருக்கும் . இங்கு குண்டேரிப்பள்ளம் அணையில் பிடித்த மீன்கள் விற்கப்படுகிறது. எப்போதேனும் வாய்ப்பு கிடைத்தால் ஓர் முறை சென்று வரலாம்

Monday, May 7, 2012

ஈரோட்டில் அருள்பாலிக்கும் அம்பிகை



ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவில்



அபிராமி அந்தாதி :

தனம் தரும்கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா
மனம் தரும்தெய்வ வடிவம் தரும்நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும்பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே

- அபிராமி பட்டர்


ஈரோட்டின் காவல் தெய்வமாக ஈரோடு மக்களால் விரும்பி வணங்குகின்ற மாரியம்மன் திருக்கோவிலாகும் .

அமைவிடம் :

பழங்காலத்தில் பூந்துறை நாட்டின் ஓர் பகுதியான ஈரோட்டை பல அரசர்கள் ஆண்டு வந்தனர் . அரசர்கள் வாழ்ந்த இடங்கள் கோட்டை இருப்பது நாம் அறிந்ததே ,அவ்வகையில் தற்போது உள்ள ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா பகுதி பழங்காலத்தில் கோட்டையாக இருந்தது . அதற்கு உதாரணமாக கோட்டை ஈஸ்வரர் திருக்கோவில் , ஸ்ரீ மகிமாலீஷ்வரர் திருக்கோவில் ,ஸ்ரீகோட்டை பெருமாள் கோவில் என பன்னீர் செல்வம் பூங்கா பகுதியில் அமைந்துள்ளது. இதற்கு அருகில் தான் பெரிய மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது .


மூலவர்:

ஸ்ரீ பெரிய மாரியம்மன் வடக்கு பார்த்த விஷேச அமைப்பான மாரியம்மன் ஆகும் . முகப்பில் அர்த்த மண்டபத்தில் காவல் தெய்வங்களான ஆண் பெண் பூதக்கணங்களை வணங்கி விட்டு அழகிய நிலையில் அம்மன் அமர்ந்த நிலையில் நான்கு கரங்களுடன் காட்சியளிப்பது பிரமிப்பாகும் .

கரங்களில் நாகபந்தனத்துடன் உடுக்கை, பாசம் ,கபாலம் கத்திகள் உள்ளன . பெரிய மாரியம்மன் பரசுராமர் திருமேனியில் காட்சியளிப்பதாக பழங்கால இதிகாசங்கள் இயம்புகின்றன.

பூஜை நேரங்கள் :
காலை 06.00மணிக்கு சந்திபூஜையும்
மதியம் 12.00 மணிக்கு உச்சிகால பூஜையும்
மாலை 06.00மணிக்கு சாயரட்ஷை பூஜையும்


தினமும் பூஜை நடைபெற்றாலும் அம்மனுக்கு உரிய நாளான வெள்ளிக்கிழமை கூட்டம் அலைமோதும் .

ஸ்தலமரம் :

அம்பிகைக்கு உரிய வேம்பு ஸ்தலமரமாக அமைந்துள்ளது.

வருடபூஜை :

பெரிய மாரியம்மன் திருவிழா பங்குனி மாதம் 1 ஆம் நாள் துவங்கி 20நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது. கடைசிநாளில் கம்பம் பிடுங்கும் விழா 19நாள் லட்சம் மக்கள் கூட முக்கிய வீதிகளில் கம்பம் செல்லப்பட்டு ஈரோடே அதிர கம்பங்களுக்கு உப்பு வீச காளிங்கராயன் வாய்க்காலில் கொண்டு சென்று விட்டு வருவார்கள் . 20 ஆம் நாள் மறுபூஜையுடன் வருடாந்திர பூஜை முடிவு பெறும் .

பெரிய மாரியம் மன் வகையறா திருக்கோவில்கள் :

ஸ்ரீ சின்னமாரியம்மன் திருக்கோவில் பெரியார் வீதியில் அமைந்துள்ளது. காரை வாய்க்கால் மேற்புறப் பகுதியில் ஸ்ரீவாய்க்கால் மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த இரு கோவில்களும் பங்குனி மாதத்தில் பெரிய மாரியம்மன் பூச்சாட்டுதலுடன் துவங்குகின்ற திருக்கோவிலாகும் . இந்த இரு மாரியம்மன் திருக்கோவிலும் விஷேசமானதே .

பெரிய மாரியம்மனை விரிவாக இணையத்தில் பார்த்து வணங்க : www.erodeperiamariamman.info.in

வலைத்தளத்தில் காணலாம் .

பெரிய மாரியம்மன் வணங்குவதின்பலன் :

ஒவ்வொரு திருக்கோவிலுக்கும் சென்று வழிபடும்போது பல்விதமான பலன்கள் ஏற்படும் அவ்வகையில் ஸ்ரீ பெரிய மாரியம்மன வணங்குவதால் குழந்தைவரம் ,நோய் நிவாரணி , தொழில் சிறப்பு உள்ளிட்ட வேண்டுவோர் வேண்டும் வரமளிக்கும் அம்பிகையாக ஸ்ரீ பெரியமாரியம்மன் விளங்குகிறது ,

அதற்கு சாட்சியாக வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் வருடாந்திர பூஜை நடக்கும் 20நாட்களும் கேழ்வரகு கூழ் , அன்னதானம் , மோர் , தாகம் தணிக்க நீர் என மக்களுக்கு வேண்டியதை செய்கின்றனர் .

முடிவுரை :

ஈரோடு மக்களின் விரும்பி வணங்குற அம்பிகை பார்க்க வேண்டிய ஸ்தலமாகும் . வடக்கு பார்த்த அம்மனாக விஷேச நிலையிலும் ஈரோட்டில் பல மாரியம்மன் திருக்கோவில்கள் அமைந்திருந்தாலும் ,
எல்லோர்க்கும் பெரியவளாக விளங்கும் அம்பிகை ஸ்ரீ பெரிய மாரியம்மனை வணங்கி வளங்களை எப்பதோதேனும் ஈரோடு வந்தால் வணங்கி விட்டுச்செல்லுங்கள் .

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...