Saturday, May 19, 2012

திருமுருகர் அவதரித்த வைகாசி விசாக நட்சத்திர வழிபாடு


தமிழ்கடவுள் முருகப்பெருமான் இந்துக்களால் விரும்பி வணங்கப்படுகிற கடவுள் . இறைவழிபாட்டில் முக்கிய விஷேச நாட்களை தேர்ந்தெடுத்து அந்த திதி ,நாட்கள் ,நட்சத்திரங்கள் , ஓரைகளை கணக்கிட்டு வணங்கினால் கண்டிப்பாக பலன் நிச்சயம் . அவ்வாறு முருப்பெருமானுக்கு தைப்பூசம் ,மாசிமகம் ,பங்குனி உத்திரம் , ஆடிப்பூரம் , இப்படி வருகின்ற நட்சத்திர நாட்களில் வைகாசி விசாகம் மிக முக்கியமாக முருகர் வழிபாட்டிற்கு உரிய நாளாகும் .

2012 ஆண்டிற்கான வைகாசி விசாக நாள் வரும் 03.06.2012 வைகாசிமாதம் 21 நாள் ஞாயிற்றுக்கிழமை நாளில் வருகிறது. அன்றைய தினம் உங்களுக்கு அருகில் உள்ள ஏதேனும் ஓர் திருமுருகர் ஆலயத்தில் வழிபாடு செய்வதின் மூலம் வளர்ச்சிகள் கைகூடும் .



வீட்டில் வணங்குவது எப்படி :


அன்றைய தினம் வீட்டை சுத்தம் செய்து சாணத்தால் மெழுகி விரதமிருந்து வீட்டில் பூஜையறையில் உள்ள முருகப்பெருமான் படத்தை சுத்தம் செய்து வைத்து

5 முக விளக்கில்
5 வித எண்ணெய் ஊற்றி
5 வித பூக்கள் ஒருசேரகட்டி
5 விதமான பழங்கள் வாங்கி வைத்து நைவேத்தியமாக்கி'
முருகருக்கு பிடித்த கந்தரப்பத்தை செய்து படைத்து

முருகருக்கு பிடித்த மாம்பழத்தையும் படைத்து அருகே முழுமுதற்கடவுளான விநாயகருக்கு கற்பூர தீபாராதனை காட்டி பின் முருகப்பெருமானுக்கு தீபம் காட்டி கந்தர்சஷ்டி கவசம் ,கந்தர் அநுபூதி, கந்த குரு கவசம் பாடி ,கேட்டு ,படித்து வழிபட தமிழ் கடவுள் முருகர் நம் வீட்டில் வந்து இறங்கி நம்மைக்காப்பது கண்கூடு.

பின் ஏதேனும் ஓர் முருகரின் ஆலயம் சென்று வழிபாடு செய்து வசதியிருப்பின் பக்தர்கள் தாகம் தீர்க்க மோர் ,தண்ணீர் ,தானமாக தர நம் குலம் தழைத்து மேலோங்கும் என்பது பெரியோர்கள் வாக்கு .அன்றைய தினம் திருமுருகர் ஆலயத்தில் செல்லும்போது செந்நிற மலர்கள் , நெய் (விளக்கேற்ற) அபிஷேகப்பொருட்களுடன் செல்வது சிறப்பு.'

ஜோதிடத்தில் பூமிகாரகன் எனச்சொல்லப்படுகிற செவ்வாய்க்கு அதிபதி முருகப்பெருமான் ஆவார் . எனவே வீடுகட்ட ,இடம் வாங்க ,நிலம் வாங்க செந்நிற பொருட்கள் வாங்குவோர் விற்போர் , ரியல் எஸ்டேட் போன்ற தொழில் செய்பவர்கள் அதிகாரத்திற்குரிய வேலைக்கு செல்ல வேண்டி விரும்புபவர்கள் ஆகியோர் முருகரை வழிபட்டால் மேன்மேலும் வளர்ச்சி கூடும் .

முடிவுரை :

திருமுருகரை முறையாக வழிபாடு செய்ய வழிவகுக்கவே இந்தப்பதிவு. வசதியில்லை என்னால் படைக்க இயலாது என்று எண்ணுபவர்கள் ஏதேனும் ஓர் முருகர் ஆலயம் சென்று வழிபடுங்கள் .ஏனெனில் இறைவன் நீங்கள் திருக்கோவில் வரவேண்டும் என்பதையே விரும்புகிறார் . நன்றி

Wednesday, May 16, 2012

பழமுதிர்சோலையின் அழகிய நூபுரகங்கை தீர்த்தம்



நூபுரகங்கை தீர்த்தம் :


மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் அழகர் மலையில் முருகரின் ஆறாம் படை வீடான பழமுதிர்சோலையும் ஒன்று .பழமுதிர்ச்சோலைக்கு வரும் பக்தர்கள் குளிக்க இயற்கையாகவே முருகப்பெருமானால் உருவாக்கப்பெற்ற கங்கையாக நூபுரகங்கை தீர்த்தம் விளங்குகிறது.

வருடம் முழுவதும் மூலிகைகள் கலந்து வரும் நூபுரகங்கை தீர்த்ததில் நீராடுவதால் பல தோஷங்கள் நிவர்த்தியாகி நம் உடல் புனிதத்துவம் பெற்று ஆரோக்கியமாவது உறுதி. திருக்கோவில் ஊழியர்களால் வரிசையாக டிக்கெட் கொடுக்கப்பட்டு வாளியில் விரும்பும் அளவிற்கு ஊற்றுகிறார்கள் . மிகுந்த சுவையுடைய நூபுர கங்கை தீர்த்தத்தை பலர் வீட்டிற்கு எடுத்துச்செல்கிறார்கள் .

அருணகிரி நாதர்பாடல் :

சோலைமலை என அழைக்கப்படும் பழமுதிர்ச்சோலையில் இருந்து சுமார் 500அடி தூரத்தில் இருக்கும் நூபுரகங்கை தீர்த்தத்தை அருணகிரிநாதர் தமது சோலைமலை திருப்புகழில்

" ஆயிர முகங்கன் கொண்ட நூபுர மிரங்கு கங்கை"

என்று வர்ணிக்கிறார் .இதன் பொருள் ஆயிரம் முகங்கள் கொண்ட நூபுரம் இறங்கும் கங்கை எனலாம் . பாட்டுச்சித்தர் ஸ்ரீ முருகப்பெருமானின் பூரண அருட்கடாச்சம் பெற்ற ஸ்ரீ அருணகிரி நாதரே சொன்ன பிறகு அதன் மகத்துவத்தை நாம் உணரவேண்டும் .

மிகவும் பழமை பொருந்திய நூபுரகங்கைக்கு சிலம்பாறு என்ற பெயரும் உண்டு. நூபுரகங்கை தீர்த்தத்தில் பல நோய் தீர்க்கும் காரணிகள் மூலிகைகள் உள்ளதாக சொல்கிறார்கள் . இரும்புச்சத்தும் ,கால்சிய சத்தும் ,தாமிரசத்துக்கள் அடங்கியுள்ளதாக பலர் கருத்து . எங்கிருந்து தொடங்குகிறது என்பதே தெரியாமல் நூபுரகங்கையில் குளித்து விட்டு வந்தோம் .எமக்கு உண்மையாகவே புத்துணர்ச்சி கிடைத்ததால்தான் இந்தப்பதிவு.

நாங்கள் நன்பர்களுடன் சென்றபோது பழமுதிர்சோலையில் இறங்கி சற்றுதூரம் சென்றதும் சிறு சிறுகடைகள் சுமார் 100படிகட்டுகள் ஏறிச்சென்றால் இரண்டு விதமான டிக்கட் விற்கிறார்கள் . அதில் ஸ்பெசல் கியூவில் சென்றால் நன்றாக 15 வாளி வரை ஊற்றுகிறார்கள். நன்றாக குளிக்கலாம் . அற்புதமான இடம் .

ஸ்ரீராக்கியம்மன் சன்னதி:

ஸ்ரீ ராக்கியம்மன் சன்னதி நூபுரகங்கை தீர்த்தம் அருகில் உள்ள காக்கும் கடவுளாகும் .அம்பாளின் திருவுருவம் போல இருக்கும் சன்னதியில் தரிசித்து விட்டு சற்றே பள்ளத்தில் உள்ள நூபுரகங்கை தீர்த்தத்தை எட்டிப்பார்த்துவிட்டு அருகேயுள்ள பழமுதிர்சோலை ஸ்ரீ வள்ளி தெய்வானை உடனமர் சுப்பிரமணியரை வணங்கி விட்டு வந்தோம் .

முடிவுரை: பழமுதிர்சோலை பற்றிய முந்திய பதிவில் எப்படி பழமுதிர்சொலை செல்வது என அறிந்து கொள்ளவும் .அழகர்மலையும் ,பழமுதிர்சோலையும் நூபுரகங்கை தீர்த்தமும் மதுரை மக்களுக்கு கிடைத்த பொக்கிசங்கள் நன்றி.

ஸ்ரீமுருகரின் ஆறாம் படைவீடு பழமுதிர்ச்சோலை தரிசனம்



பழமுதிர்ச்சோலையில் அருள்பாலிக்கும்

ஸ்ரீ வள்ளி தெய்வானை உடனமர் ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்கோவில்



பழமுதிர்சோலையின் முருகரை வணங்க துதி :

"எழுமுதி ரைப்புனத்து இறைவி முன்புதன்
கிழமுதிர் இளநலங் கிடைப்ப முன்னவன்
மழமுதிர களிறென வருதல் வேண்டிய
பழமுதிர் சோலையம் பகவற் போற்றுவாம் ."

அமைவிடம் :

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் அழகர் கோயில் நடுமலையில் பழமுதிர் சோலை அமைந்துள்ளது. மதுரையின் சிறப்புகளில் ஒன்றாக விளங்கும் பழமுதிர்சோலை அறுபடைவீடுகளில் ஆறாவது படை வீடாகும் .

முதல் படைவீடான திருப்பரங்குன்றம் மதுரையில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது இது முருகரின் முதல் படை வீடாகும் .முருகப்பெருமானின் இருபடை வீடுகளை தன்னகத்தே கொண்டுள்ள மதுரை ஒர் அற்புத ஆன்மீக நகராகும் .

மூலவர் :

ஸ்ரீ வள்ளி தெய்வானை உடனமர் ஸ்ரீ சுப்பிரமணியர்

ஸ்தல விருட்சம் : நாவல் மரம்

ஔவைக்கு ஸ்ரீ முருகர் காட்சி தந்து நாவற்பழம் கொடுத்த இடம் . இது ஐப்பசிமாதத்தில் மட்டுமே பழம் பழுக்கும் .மற்ற நாவல் மரங்கள் ஆடி ஆவணிமாதத்தில் மட்டும் பழம் பழுக்கும்

தீர்த்தம் :

நூபுர கங்கை தீர்த்தம்

திருக்கோவில் சுற்றியுள்ள சன்னதிகள் :


முழுமுதற் கடவுளாம் அருள்மிகு வித்தக விநாயகர் தரிசனம் செய்து பின் மூலவரான வள்ளி தெய்வானை உடனமர் ஸ்ரீ சுப்பிரமணியர் தரிசித்து ஸ்ரீ ஆதிவேல் உற்சவர் வணங்கி பின் ஸ்ரீ நாவல் மரத்தடி விநாயகரை பார்த்து வரலாம் .

பழமுதிர் சோலை செல்லும் வழிகள் பஸ் வசதிகள் :

மதுரையில் இருந்து அழகர் கோவில் 20 கி.மீட்டர் தொலைவில் கடந்து அழகர்மலை அடிவாரத்தில் இருந்து திருக்கோவில் நிர்வாகத்தால் இயக்கப்படும் சிற்றுந்தின் மூலம் 20நிமிட பயணத்தில் பழமுதிர்ச்சோலையை அடையலாம் .

மதுரையில் இருந்து அழகர்மலை செல்ல காலை 05.00மணியில் இருந்து இரவு 10.00 மணிவரைகள் பஸ்கள் உண்டு. அழகர் மலையில் இருந்து பழமுதிர்சோலை செல்ல திருக்கோவில் நிர்வாகத்தின் பஸ் காலை 06 .00மணி முதல் மாலை05.00மணி வரை பேருந்துகள் இயக்கப்படுகிறது.

பூஜை முறைகள் :

மூன்றுகாலப்பூஜைகள் பழமுதிர்ச்சோலையில் நடைபெறுகிறது.
காலை அபிஷேகபூஜை 09.00 மணிக்கும்
உச்சிகால பூஜை 12.00மணிக்கும்
மாலை அபிஷேகபூஜை 05.00மணிக்கும் நடைபெறுகிறது.
திருக்கோவில் காலை 0600மணிமுதல் மாலை
0600மணி வரை திறந்தே இருக்கும் .

பழமுதிர்ச்சோலையின் சிறப்புகள் :

அழகர்மலையின் அடிவாரத்தில் காக்கும் கடவுள் ஸ்ரீ திருமாலின் வைணவத் திருக்கோவில் அமைந்துள்ளது. மலையின் மேலே பழமுதிர்சோலையில் ஸ்ரீ முருகர் (சைவம் )குடிகொண்டுள்ளார் .

சைவ,வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஸ்தலம் . மாமனாகிய திருமாலும் மருமகனாகிய ஸ்ரீமுருகரும் இணைந்த ஸ்தலம் . பழமுதிர்சோலை வருபவர்கள் அழகர் மலையில் திருமாலை வணங்கி விட்டு பின்னர் பழமுதிர்ச்சோலை வருவதே சிறப்பாகும் .

ஆறாம் படை வீடு ,மாட்டுக்கார சிறுவனாக வந்து அவ்வையார்க்கு நாவல் பழம் கொடுத்து காட்சி தந்த ஸ்தலம் . பாடல் பெற்ற ஸ்தலம் .அழகிய கண்ணனும் அழகன் முருகனும் ஆட்சி செய்வதாலேயே இது அழகர் மலையானது. கந்தபுராணம் இயற்றிய கச்சியப்பர் வியந்து பாடிய ஸ்தலம் .

அருணகிரி நாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற ஸ்தலம் , திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் போற்றிப்புகழ்ந்த அழகு மிகு மலையில் அமைந்துள்ள அற்புத ஸ்தலமே பழமுதிர்சோலையாகும் .

ஸ்தலத்தின் வேறுபெயர்கள் :

சோலைமலை, பழமுதிர்ச்சோலை, குலகிரி,குலமலை, விருஷபகிரி,

முடிவுரை :

பழமுதிர் சோலை வருகின்றவர்கள் நூபுரகங்கை தீர்த்தத்தில் குளித்து மாற்றிக்கொள்ள ஏதுவாக மாற்றுத்துணிகளுடன் வந்தால் நூபுரகங்கையில் குளித்து விட்டு ஸ்ரீ முருகப்பெருமானை 500மீட்டர் நடந்து வந்து ஸ்ரீ பழமுதிர்ச்சோலையில் முருகப்பெருமானை வணங்கலாம் .

நூபுரு கங்கை தீர்த்தம் பற்றி நிறைய தகவல்கள் அடுத்த பதிவில்

வாழ்நாளில் ஒரு முறையேனும் ஆறாம்படை வீடான பழமுதிர்ச்சோலயில் அருள்பாலிக்கும் ஸ்ரீ முருகரை வணங்கி செல்லுங்கள் .

கருத்துரையிடுங்கள் நன்றி

திருப்பரங்குன்றம் ஸ்ரீதெய்வானை உடனமர் சுப்பிரமணிய சுவாமி ஆலய தரிசனம்



திருமணத்தடை தீர்க்கும்

திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்




துதி :

ஒரு முருகா என்று என் உள்ளங்குளிர உவந்துடனே
வருமுருகா என்று வாய் வொருவா நிற்பக் கையிங்ஙனே
திருமுருகா என்று தான் புலம்பா நிற்கும் தையல் முன்னே
திருமுருகாற்றுப்படையுடனே வரும் சேவகனே !

அமைவிடம் :

தமிழ்சங்கம் வளர்த்த மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் மதுரைக்கு தென்மேற்கில் சுமார் 7 கி.மீட்டர் தொலைவிலும் மதுரையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளது.

திருக்கோவில் அமைப்பு :

சுமார் 300அடி உயர பாறையின் அடியில் அமையப்பெற்ற அழகிய குடவரைக்கோவிலாகும் . மூலவர் : திருமுருகன் தெய்வானையுடன் திருமணம் நடைபெற்ற இடம் . இங்கு முருகப்பெருமான் தெய்வானை திருமணத்திருக்கோலத்தில் அமைந்திருக்கிறார் . ஸ்ரீ முருகர் திருப்பரங்குன்றத்தில் தவம் செய்ததாக புராணங்கள் இயம்புகின்றன.

மூலவரும் உடனுறை மூர்த்திகளும் :

ஸ்ரீ பரங்கிநாதர் (சிவலிங்கம் )
ஸ்ரீ கற்பக விநாயகர் ,
துர்க்கை ( கொற்றவை )
ஸ்ரீதேவிபூதேவி உடனமர் பெருமாள் ,
மூலவர் தெய்வானை உடனமர் ஸ்ரீ சுப்பிரமணியர்

ஆகிய ஐந்து மூர்த்திகளும் தனித்தனி கருவறைகளில் ஒரே மண்டபத்தில் அருள்பாலிக்கின்றனர் . குகைக்குள் உள்ள குடவரைக்கோவில் வித்தியசாமான ஆன்மீக அனுபவம் .

புராணக்கதை :

சூரபத்மனை அழித்தமையால் இந்திரன் தன் மகளான தெய்வானையை மணம் செய்து வைக்க திருப்பரங்குன்றத்தில் ஆசைப்பட்டு தேவர்கள் ,நாரதர் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க ஸ்ரீ முருகப்பெருமான் தெய்வானையை இத்தலத்தில் மணம் புரிந்து முருப்பெருமான் உறையும் அறுபடை வீடுகளில் முதல் படைவீடாக சிறப்பிடம் பெற்று விளங்குகிறது.

திருப்பரங்குன்றத்தின் சிறப்புகள் :

1. பாண்டிய நாட்டில் பாடல்பெற்ற 14 சைவத்திருத்தலங்களில் ஒன்று
2. ஸ்ரீ முருகர் தெய்வானையுடன் திருமணக்கோலத்தில் இங்கு மட்டுமே காணலாம்
3. பாறையில் செதுக்கப்பட்ட ஒரே குடவரைக்கோவில்
4. ஆறுபடைவீடுகளில் முதல் படை வீடு
5.இரட்டை விநாயகர் சிலைகள்
6. மூர்த்தி,ஸ்தலம் ,தீர்த்தம் ஆகிய முச்சிறப்புகளையும் கொண்டது
7. தேவாரம் கூறும் சைவத்திருத்தலங்கள் 275ல் ஒன்று
8. முருகர் அமர்ந்த நிலையில் காணப்படும் சிறப்பு
9 .சிவபெருமானும் முருகரும் இணைந்து காணப்படுவதால் "தெற்கு கயிலாய மலை " என கூறப்படும் சிறப்பு

10.போகர் சாப விமோசனம் பெற்ற ஸ்தலம்
11. பாராசுர முனிவரின் மகன்கள் சாபம் நீங்கப்பெற்ற ஸ்தலம் என கண்ணுக்கு தெரியாத பல்வேறு சிறப்புகளை அற்புதங்களை நிகழ்திய ஸ்தலமாகும் .

சான்றுகள் :

சமண முனிவர்கள் இங்கு பஞ்சபாண்டவர்கள் குகையில் தங்கியிருந்ததற்கான சான்றுகள் 3 ஆம் நூற்றாண்டின் பிராமி எழுத்துக்கள் இன்றும் உள்ளதாம் . புராணங்காலங்களில் இருந்து புகழ்பெற்றுவந்த திருப்பரங்குன்றத்தை பாண்டிய மன்னர் நெடுஞ்சடையான் பராந்தகன் கி.பி 765- 815 ல் உருவாக்க முனைந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றது.

ஸ்தலமரம் : கல்லத்தி மரம்

லட்சுமி தீர்த்தம் :

திருக்கோவில் வளாகத்தில் அமைந்துள்ள பெரிய குளமாகும் . அழகிய மீன்களுக்கு மக்கள் இங்கே விற்கப்படும் பொறிகளை இறைத்து வருகின்றனர் .

திருப்பரங்குன்றதை வியந்து பாடல் பாடியவர்கள் :

திருஞானசம்பந்தர் ,ஸ்ரீ சுந்தரர் ஆகியராலும் தேவாரப்பதிகளில் பாடப்பெற்றும் குமரகுருபரர் ,நக்கீரர்,பாம்பன் சுவாமிகள் ,அருணகிரிநாதரால் பாடல் பெற்ற ஸ்தலம் .

பூஜை நடைபெறும் நேரங்கள் :

கோபூஜை -5..00மணிக்கு துவங்கி உச்சிகாலம் பூஜை12.30வரையிலும் மாலை சாயரட்சையில் 05.30க்கு துவங்கி இரவு 9.30க்கு பள்ளியறை பூஜைகளுடன் முடிவுகிறது.

திருவிழா :

வைகாசி மாதத்தில் வைகாசி விசாக தினம், பங்குனி உத்திரம் ஆகிய இந்துக்களின் அனைத்து விஷேச தினங்களும் முருகப்பெருமானுக்குரிய விஷேச பூஜைநாட்களும் உகந்தது. வெளியூர் பக்தர்கள் எல்லா நாட்களிலும் அருள் வேண்டி வருகின்றனர் .

முடிவுரை :

ஏழு நிலை இராஜகோபுரங்களுடன் 12 தீர்த்தங்களுடன் ஸ்ரீ முருகப்பெருமான் தெய்வானையுடன் மணக்கோலத்தில் புரிகிறார் . இங்கே வழிபடுபவர்கள் நல்ல மணவாழ்வு அமைந்து மங்கள இசை கேட்கலாம் திருமண வரம் கிட்டும் .

திருப்பரங்கிரி,சுமந்தவனம் ,கந்தமாலை ,சுவாமிநாதபுரம் ,தென்பரங்குன்றம் ,தண்பரங்குன்றம் என்று அழைக்கப்படும் திருப்பரங்குன்றத்தை திருப்பரங்குன்ற நாதனை வணங்கி மங்களம் உண்டாக வாழ்த்துக்கள் .

ஓம் முருகா சரணம் முருகா

Thursday, May 10, 2012

குன்றி மலைச்சாரலில் அமைந்த குண்டேரிப்பள்ளம் அணைக்கட்டு




குண்டேரிப்பள்ளம் அணைக்கட்டு



ஈரோடு மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டுகளில் பார்க்கவேண்டிய அணைக்கட்டில் குண்டேரிப்பள்ளம் அணைக்கட்டும் ஒன்றாகும் .பெரிய அளவில் இல்லை என்றாலும் சிறிய அளவில் அழகு மிகுந்து சுற்றிலும் மலைகள் பச்சைப்பசேல் என இருக்க இயற்கையாகவே அமைதி நம்மை தொட்டுச்செல்கிறது.

அமைப்பு :

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் கொங்கம்பாளையம் அருகே அமைந்துள்ளது.

எப்படி செல்வது :

சத்தியமங்கலத்தில் இருந்து அத்தாணி செல்லும் வழியில் வாணிப்புத்தூரில் இருந்து சுமார் 7 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கொங்கர்பாளையம் வரை செல்ல பஸ் வசதி உண்டு.ஆனால் அடிக்கடி குண்டேரிப்பள்ளம் அணை செல்ல பஸ் வசதி இல்லை. கார் அல்லது இருசக்கர வாகனத்தில் செல்வது நல்லது. பெரிய எதிர்பார்ப்புகளுடன் சென்றால் ஏமாற்றமே மிஞ்சும் .

விளக்கோம்பை , குன்றி மலையில் பெய்கின்ற மலைநீர் சேகரிக்கப்படும் இடமாக குண்டேரிப்பள்ளம் திகழ்கிறது. சுமார் ஒரு கி.மீட்டர் தூரமுள்ள அணைக்கட்டின் மேல் சாலையில் நடந்து சுற்றிலும் மலைகள் ரசிக்கலாம் .குண்டேரிப்பள்ளம் அணையை பார்க்க வருபவர்கள் உணவுப்பொருட்கள் கொண்டு வருவது நல்லது. இங்கு உணவுக்கடைகள் கிடையாது.

யானைகள் :

மாலை நேரத்தில் தண்ணீர் குடிக்க யானைகள் கூட்டம் இங்குள்ள நீர்பிடிப்பு பகுதிக்கு வருவதுண்டாம் .அணையின் மேல் இருந்து பார்க்கலாம் என சொன்னார்கள் . நீங்கள் யானையை பார்த்தால் பின்னூட்டம் இடுங்கள் .

முடிவுரை :

ஒருநாள் பயணத்திற்கு ஏற்ற இடம் . அமைதியை தேடிச்செல்ல அழகிய இடம் . ஞாயிற்றுக்கிழமைகளில் மிதமான கூட்டம் இருக்கும் . இங்கு குண்டேரிப்பள்ளம் அணையில் பிடித்த மீன்கள் விற்கப்படுகிறது. எப்போதேனும் வாய்ப்பு கிடைத்தால் ஓர் முறை சென்று வரலாம்

Monday, May 7, 2012

ஈரோட்டில் அருள்பாலிக்கும் அம்பிகை



ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவில்



அபிராமி அந்தாதி :

தனம் தரும்கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா
மனம் தரும்தெய்வ வடிவம் தரும்நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும்பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே

- அபிராமி பட்டர்


ஈரோட்டின் காவல் தெய்வமாக ஈரோடு மக்களால் விரும்பி வணங்குகின்ற மாரியம்மன் திருக்கோவிலாகும் .

அமைவிடம் :

பழங்காலத்தில் பூந்துறை நாட்டின் ஓர் பகுதியான ஈரோட்டை பல அரசர்கள் ஆண்டு வந்தனர் . அரசர்கள் வாழ்ந்த இடங்கள் கோட்டை இருப்பது நாம் அறிந்ததே ,அவ்வகையில் தற்போது உள்ள ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா பகுதி பழங்காலத்தில் கோட்டையாக இருந்தது . அதற்கு உதாரணமாக கோட்டை ஈஸ்வரர் திருக்கோவில் , ஸ்ரீ மகிமாலீஷ்வரர் திருக்கோவில் ,ஸ்ரீகோட்டை பெருமாள் கோவில் என பன்னீர் செல்வம் பூங்கா பகுதியில் அமைந்துள்ளது. இதற்கு அருகில் தான் பெரிய மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது .


மூலவர்:

ஸ்ரீ பெரிய மாரியம்மன் வடக்கு பார்த்த விஷேச அமைப்பான மாரியம்மன் ஆகும் . முகப்பில் அர்த்த மண்டபத்தில் காவல் தெய்வங்களான ஆண் பெண் பூதக்கணங்களை வணங்கி விட்டு அழகிய நிலையில் அம்மன் அமர்ந்த நிலையில் நான்கு கரங்களுடன் காட்சியளிப்பது பிரமிப்பாகும் .

கரங்களில் நாகபந்தனத்துடன் உடுக்கை, பாசம் ,கபாலம் கத்திகள் உள்ளன . பெரிய மாரியம்மன் பரசுராமர் திருமேனியில் காட்சியளிப்பதாக பழங்கால இதிகாசங்கள் இயம்புகின்றன.

பூஜை நேரங்கள் :
காலை 06.00மணிக்கு சந்திபூஜையும்
மதியம் 12.00 மணிக்கு உச்சிகால பூஜையும்
மாலை 06.00மணிக்கு சாயரட்ஷை பூஜையும்


தினமும் பூஜை நடைபெற்றாலும் அம்மனுக்கு உரிய நாளான வெள்ளிக்கிழமை கூட்டம் அலைமோதும் .

ஸ்தலமரம் :

அம்பிகைக்கு உரிய வேம்பு ஸ்தலமரமாக அமைந்துள்ளது.

வருடபூஜை :

பெரிய மாரியம்மன் திருவிழா பங்குனி மாதம் 1 ஆம் நாள் துவங்கி 20நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது. கடைசிநாளில் கம்பம் பிடுங்கும் விழா 19நாள் லட்சம் மக்கள் கூட முக்கிய வீதிகளில் கம்பம் செல்லப்பட்டு ஈரோடே அதிர கம்பங்களுக்கு உப்பு வீச காளிங்கராயன் வாய்க்காலில் கொண்டு சென்று விட்டு வருவார்கள் . 20 ஆம் நாள் மறுபூஜையுடன் வருடாந்திர பூஜை முடிவு பெறும் .

பெரிய மாரியம் மன் வகையறா திருக்கோவில்கள் :

ஸ்ரீ சின்னமாரியம்மன் திருக்கோவில் பெரியார் வீதியில் அமைந்துள்ளது. காரை வாய்க்கால் மேற்புறப் பகுதியில் ஸ்ரீவாய்க்கால் மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த இரு கோவில்களும் பங்குனி மாதத்தில் பெரிய மாரியம்மன் பூச்சாட்டுதலுடன் துவங்குகின்ற திருக்கோவிலாகும் . இந்த இரு மாரியம்மன் திருக்கோவிலும் விஷேசமானதே .

பெரிய மாரியம்மனை விரிவாக இணையத்தில் பார்த்து வணங்க : www.erodeperiamariamman.info.in

வலைத்தளத்தில் காணலாம் .

பெரிய மாரியம்மன் வணங்குவதின்பலன் :

ஒவ்வொரு திருக்கோவிலுக்கும் சென்று வழிபடும்போது பல்விதமான பலன்கள் ஏற்படும் அவ்வகையில் ஸ்ரீ பெரிய மாரியம்மன வணங்குவதால் குழந்தைவரம் ,நோய் நிவாரணி , தொழில் சிறப்பு உள்ளிட்ட வேண்டுவோர் வேண்டும் வரமளிக்கும் அம்பிகையாக ஸ்ரீ பெரியமாரியம்மன் விளங்குகிறது ,

அதற்கு சாட்சியாக வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் வருடாந்திர பூஜை நடக்கும் 20நாட்களும் கேழ்வரகு கூழ் , அன்னதானம் , மோர் , தாகம் தணிக்க நீர் என மக்களுக்கு வேண்டியதை செய்கின்றனர் .

முடிவுரை :

ஈரோடு மக்களின் விரும்பி வணங்குற அம்பிகை பார்க்க வேண்டிய ஸ்தலமாகும் . வடக்கு பார்த்த அம்மனாக விஷேச நிலையிலும் ஈரோட்டில் பல மாரியம்மன் திருக்கோவில்கள் அமைந்திருந்தாலும் ,
எல்லோர்க்கும் பெரியவளாக விளங்கும் அம்பிகை ஸ்ரீ பெரிய மாரியம்மனை வணங்கி வளங்களை எப்பதோதேனும் ஈரோடு வந்தால் வணங்கி விட்டுச்செல்லுங்கள் .

Sunday, April 29, 2012

குருவரெட்டியூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் நூற்றாண்டு விழா 18.4.12



கடந்த 18.4.2012 அன்று நமது குருவரெட்டியூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் நூற்றாண்டு விழா அழகாக தொடங்கியது. 26.2.1913ல் துவங்கிய துவக்கப்பள்ளி 100வது ஆண்டை துவங்கியது மகிழ்வான ஒன்றாகும் .

இந்த விழாவினை சிறப்பிக்க கல்வித்துறை அலுவலர்கள் ,கிராமக்கல்விக்குழு உறுப்பினர்கள் ,பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் .தன்னார்வலர்கள் பெற்றோர்கள் ஊர்பொதுமக்கள் கலந்து கொள்ள 18.4.12 புதன்கிழமை காலை 09.00 மணிக்கு தமிழ்தாய் வாழ்த்து முழங்க கொடியேற்றி துவங்கியது.

தாயகம் சிவ.சிவலிங்கம் கொடியேற்றி தலைமை தாங்கினார் . நூற்றாண்டு விழா வளைவை dr.ஜீவானந்தம் பசுமை இயக்கம் திறந்து வைக்க வாழ்த்துரை பல ஊர்பெரியோர்கள் வழங்க இனிதே நடைபெற்றது.

மாலை 3.00மணிக்கு குருவரெட்டியூர் ஊராட்சி ஒன்றிய தலைவி திருமதி என் .நீலாதேவி நடராஜன் அவர்கள் தலைமை தாங்க விழா இனிதே தொடர்ந்து நடைபெற்றது. விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று அழகாக நூற்றாண்டு விழாவை சிறப்பித்து நடத்திய இரா .வெங்கடாலசலம் தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் நல் விதமாக நடத்திமுடித்தது பாரட்டுக்குரியது.


பழங்காலத்தில் பள்ளிக்காக தானமாக இடம் வழங்கிய G.G குருமூர்த்தி EX M.L.A அவர்கள் நினைவாக நூற்றாண்டு விழா வளைவுத்தூண் அவர்கள் புதல்வர்கள் உருவாக்கப்பெற்றது. மாலை 6.00 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நம் பள்ளி குழந்தைகள் பலர் அழகாக கிராமிய நடனம் நடைபெற்றது.


பலர் வாழ்வில் ஏற்றங்களை ஏற்படுத்திய பள்ளி . இன்னும் பல நூற்றாண்டுகள் கடந்து பல சாதனைகள் படைக்கட்டும் . மறுபடி பள்ளிப்பருவத்திற்கு சென்று வந்து உணர்வை ஏற்படுத்தியது.

Wednesday, April 25, 2012

உனக்காக காத்திருக்கிறேன்



ப்ரியமானவளே...!

உன்னை ஒரே
ஒரு நாள்
பார்த்து விட்டு
விலகி வந்தாலும்
உன் நினைவுகளில்
நகராது நிற்கிறது ... ?
என் நாட்கள் ...!

நீயே ஓவியமாக



அன்பே...
நீ வரைந்த
ஓவியங்களை ரசித்து
விட்டு திரும்புகையில்
என்னுடேனேயே வருகிறது...!
ஓவியத்தின் அழகும்
எனக்குள்ளே ஓவியமாய்
இருக்கிற
உன் நினைவுகளும் ..!

Monday, April 23, 2012

நாகதோஷம் போக்கி நல்வாழ்வளிக்கும் நாகமலை பயணக்கட்டுரை





நாகமலை

SRI NAGAMALAI ,MATHESWARA HILLS; KARNATAKA STATE

நாகமலை என்பது சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து மாதேஷ்வரமலை சென்றால் கர்நாடக மாநிலம் அடைந்து ஸ்ரீ மாதேஸ்வரரை தரிசனம் செய்து அங்கிருந்து நாகமலைக்கு செல்ல வேண்டும் எனக்கேட்டால் சொல்வார்கள் .

ஸ்ரீ மாதேஷ்வரமலையில் இருந்து 14 கி.மீ தூரத்தில் நாகமலை அமையப்பெற்றுள்ளது. 7 கி.மீட்டர் மாதேஷ்வரமலையில் இருந்து ஜீப் பயணம் கரடுமுரடான திகில் பயணத்துடன் செங்குத்தான செம்மண் மலைபாதைகளில் நம் பயணம் தொடர்ந்தது.

அங்கே சிறிய ஊரை அடைந்தோம் . இங்கிருந்து நாகமலைக்கு 6 கி.மீட்டர் மலையில் நடந்து செல்ல வேண்டும். ஜீப்பீல் மாதேஷ்வர மலையில் இருந்து நபர் ஒருவருக்கு ரூ 35 கொடுத்தால் 7 கி.மீட்டர் மலைப்பாதையில் கடந்து ஓர் கிராமத்தில் இறக்கி விடுகிறார்கள் . மலைக்கிராமமான இங்கு ஏழ்மைகள் தவழ குழந்தைகள் விளையாடுகிறது. சிறிய பள்ளிக்கூடமும் டீக்கடைகளும் இங்கு உண்டு .

நடக்க ஆரம்பித்தால் வளைந்து செல்லும் சாலைகள் நடக்க இந்த கிராமம் தாண்டினால் சமப்பகுதி வருகிறது.யானைகள் உலவும் இடமாகவும் கடக்கும் வழிகள் இருப்பதால் கவனமாக செல்லவும் . மலைகள் ஏற ஆரம்பித்தால் சிறியதும் பெரியதுமாக 7 மலைகள் ஏற வேண்டும் .எளிதான மலைதான் 4 மணி நேரத்தில் எளிதாக அடைந்து விடலாம் .

வயதானவர்கள் கூட மலை ஏறலாம் . 7மலை என்று சொன்னாலும் கூட 3 மலைகள் தான் கடப்பது போன்ற உணர்வு நமக்கு ஏற்படுகிறது.

நாகமலை அடிவாரம் இண்டிக நத்தம் :

ஓர் வழியாக பயணித்து நாகமலை அடிவாரத்தில் இண்டிக நத்தம் என்ற ஊரை அடைந்தோம் . பக்தர்கள் பயன்படுத்த இரண்டு கிணறுகள் , ஓர் உணவுக்கடை , மற்றும் சில டீக்கடைகள் இங்கு உள்ளன. இங்கு குளிப்பவர்கள் கிணற்று நீரை வாளியில் இழுத்து பயண்படுத்திக்கொள்ளலாம் .

அடிவார விநாகர் திருக்கோவில் வணங்கி ,அருகில் உள்ள சனீஷ்வரர் தனிச்சன்னதியை வணங்கி சற்றே மேலே சென்றால் சிறிய மலையின் உச்சியில் நாகமலை அமைந்துள்ளது.

மூலவர் :

லிங்க உருவில் அமைந்துள்ள மாதேஸ்வரர் ஆவார். 7தலை கொண்ட தலைநாகமாக அமைந்துள்ளது. இயல்பாக லிங்கம் சுயம்பு மூர்த்தியாக விளங்குகிறார் . .மாதேஷ்வரர் தற்போதுள்ள ஸ்ரீ மலைமாதேஸ்வரர் நடுமலைக்கு வருவதற்கு முன் நாகமலையில் சஞ்சாரம் செய்ததாக வரலாறு.

இங்கு லிங்க உருவில் நாகேஷ்வரராக காட்சி அளிக்கிறார் . நாகமலைக்குன்றின் வலப்பக்கம் சிறிய குகை உள்ளது. அதில் பக்தர்கள் பசும்பால் இட அது நீலநிறமாக மாறும் ஆச்சர்யம் காணலாம் . நாகமே சிவனைக்காக்கின்ற அமைப்பும் வித்தியாசமானதாகும் .

நாகமலை பெயர் காரணமும் அதிசயமும் :

திருக்கோவில் அமைவிடத்தின் பின்புறம் மிகப்பெரிய லிங்க உருவில் பாறையும் அதன் பின்னால் நாகப்பாம்பு உருவில் அந்த லிங்கத்தை பாதுகாப்பதுபோல் படம் எடுத்த நிலையில் பெரிய பாறையும் மிகப்பெரிய ஆச்சர்யம் அளிக்கிறது. போட்டோவை இணைத்துள்ளேன் பாருங்கள் .

திருக்கோவில் காலம் :

சுமார் 800முதல் 1000ஆண்டுகாலமாக இங்குள்ள மலைவாழ்மக்களான லிங்காயத்துகளால் பத்து தலைமுறைகளாக பூஜை செய்து வருவதாக செவிவழிச்செய்திகளாகும் . சான்றுகள் இல்லா விட்டாலும் மிகப்பழமை கொண்ட மலையாகும் . இங்குதான் ஸ்ரீமாதேஷ்வரர் புலியின் மீதேறி வலம் வந்தாராம் .நாக சர்ப்பம் இன்னும் இந்த நாகமலையில் ஏராளமாக வாழ்வதாகவும் பக்தர்கள் நம்பிக்கை

ஸ்தலமரம் :

பயிரன் மரம் மூலவர் எதிரே அமைந்துள்ளது . அருகே முகப்பில் விநாகர் அமைந்துள்ளார் .

பூஜைநாட்கள் :

எல்லா விஷேச நாட்களிலும் கூட்டம் இருந்தாலும் அமாவசை அன்று கூட்டம் அதிகமாக இருக்கும்.

ஸ்ரீ மாதேஸ்வரர் :

முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவனிடம் அசுரர்களை அழிக்க வேண்டியதாகவும் பின் ஸ்ரீ சைலத்தில் உத்திரராஜம்மா ,சந்திரசேகரமூர்த்திக்கு மகனாக ஸ்ரீ மாதேஸ்வரர் பிறந்து 16 வயதில் சிவாம்சம் பொருந்திய சித்தராக சாமியாக சிவனாக வணங்கப்படுகிற பல அற்புதங்களை காண்பித்தவர் .

புலி மேல் வலம் வந்து மகிமாசுரன் சிரவணா போன்ற அசுரர்கள் அழிக்க வந்த சிவனாக வழங்கப்படுகிறவர் . நாகமலையை சுற்றி பல மலைகள் அரணாக காக்கின்றன . இங்கு எல்லாம் ஸ்ரீ மாதேஸ்வரர் வலம் வந்ததால் பக்தர்கள் செருப்பில்லாமல் மலை ஏறுகிறார்கள் . அசுரர்களை அழித்த இடம் சித்தூர் மட்டமாகும் .

நாகமலை சுற்றியுள்ள மலைகள் :

மயில் மலை, தேவுமலை ,ஆதி மாதேஷ்வரமலை ,கோடுகல் மாதேஷ்வரமலை, ஆணைத்தலை திம்பம் , தப்பசரைபெட்டா, குஞ்சுமலை, கத்திரி மலை , குருகஞ்சிமலை, சங்குமலை,தேன்மலை என நாகமலையை சுற்றிலும் மிகப்பிரமாண்ட மலைகள் அமைந்துள்ளன.

எல்லா மலைகளிலும் ஸ்ரீ மாதேஸ்வரர் சஞ்சாரம் செய்தாலும் நாகமலையில் வலம் வந்து கடைசியாக தற்போது அமைந்துள்ள நடுமலையில் மலை மாதேஸ்வரர் வந்து புற்றுக்கண்ணில் ஐக்கியமாகி வரும் பக்தர்களுக்காக சுயம்பு லிங்கமாக அமைந்து அருளாட்சி புரிகிறார் .

பக்தர்கள் :

20 வருடமாக அமாவசை தொடர்ந்து வரும் பக்தர்கள் ஏராளம் . வீடு, திருமணம், குழந்தைவரம் .போன்ற சுப நிகழ்வு பிரார்த்தனைகள் இங்கு எளிதாக நிறைவேறுகிறது. ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஜாதக தடை உள்ளவர்கள் கண்டிப்பாக தரிசனம் செய்யதால் பலன் நிச்சயம் .

பெங்களூர் பக்தர் ஒருவர் தன் மகன் வேலைக்காக வேண்டி வேலை கிடைத்தும் கோபிநத்தத்தில் இருந்து மின்சார வசதியை நாகமலைக்கு கொண்டு வந்து தன்பங்காக திருக்கோவிலை ஒளிர விட்டுள்ளார். '

முடிவுரை :

சுயம்பு மூர்த்தியாய் சிவலிங்கம் நாகமலையில் சிவனைக்காக்கிற அதிசயம் காண ஓர் முறை செல்லுங்கள் . பல தடைகளை தாண்டியே எம்மால் செல்ல முடிந்தது ." அவனவன் பால் அவன் தாள் வணங்கி" என்னும் இறை கூற்றிற்கு ஏற்ப இறைவன் அழைத்தால் மட்டுமே செல்லக்கூடிய திருக்கோவில் .

வாய்ப்பு கிடைத்தால் ஒர்முறை வந்து தரிசித்து விட்டு செல்லுங்கள் . இதைப்படிக்கிற உங்களுக்கும் வாழ்வில் மாற்றங்களும் ஏற்றங்களும் வர ஸ்ரீ நாகமலை ஆண்டவரை வேண்டுகிறேன் .

ஓம் சிவாய நமஹ.

ஆயிரம் ஆண்டுகள் கடந்த ஈரோடு ஸ்ரீ மகிமாலீஷ்வரர் திருக்கோவில்



ஸ்ரீ மகிமாலீஷ்வரர் திருக்கோவில் ஈரோடு
SRI MAGIMALEESWARAR TMPLE ERODE


அமைப்பு:

ஈரோடு மாவட்டத்தில் பல சிவாலயங்கள் இருக்கப்பெற்றாலும் 1000ஆண்டுகள் தாண்டி கம்பீரமாக இருக்கும் சிவாலயங்கள் சிலதே. அதில் ஸ்ரீ மகிமாலீஷ்வரர் திருக்கோவிலும் ஒன்று. திருக்கோவில் ஈரோடு நகரில் பன்னீர் செல்வம் பூங்கா அருகில் டி.வீ.எஸ் வீதியில் அமைந்துள்ளது. ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள சிவாலயமாகும் .

திருக்கோவில் சிறப்புகள் :

பெரும்பாலான சிவாலயங்கள் கிழக்கு நோக்கி இருக்க ஸ்ரீமகிமாலிஷ்வரர் மேற்கு நோக்கி அமைந்துள்ளார் .முதல் கொங்கு சோழனால் கட்டப்பெற்ற திருக்கோவில் .

மூலவர் அமைப்பு :

ஸ்ரீமகிமாலீஷ்வரர் சிவலிங்கமாக 2மீட்டர் அகலமும் ஒரு மீட்டர் உயரமும் கொண்டவராக அமைந்துள்ளார் . மூலவர் வெளியே எடுக்கமுடியாத படி மூலவரின் வாசற்படிகள் அமைந்துள்ளது வித்தியாசமானது.

ஸ்தலமரம் :

வில்வமரம் பழங்காலத்தில் திருக்கோவில் அமைந்துள்ள இடம் வில்வ மரங்கள் சூழ்ந்து வில்வ வனமாக அமைந்திருந்து. ஆயிரம் வருடம் கழித்து ஈரோடு நகரின் பெருக்கத்தால் தற்போது காணாமல் போய் ஸ்தலமரமாக ஒரு வில்வம் மட்டும் அமைந்துள்ளது.


திருக்கோவில் காலமும் பெயர் விளக்கமும் :

கி.பி 942 முதல் கி.பி 980 வரை ஈரோடு மண்ணை ஆட்சி செய்த முதல் கொங்கு நாட்டின் சோழ மன்னன் மகிமாலயன் என்பவரால் கட்டப்பெற்றதாக வரலாறுப்பதிவாகும் . திருக்கோவில் ஸ்தலபுராணமும் இதே கருத்தை இயம்ப மன்னர் மகிமாலயனால் தோற்றுவிக்கபட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட ஈஸ்வரர் என்பதால் தனது பெயராலேயே ஸ்ரீமகிமாலீஸ்வரர் திருக்கோவில் என அழைக்கப்பட்டதாக கருதலாம் . இயல்பாக சிவபக்தி கொண்ட மகிமாலயனுக்கு பரகேசரி கோநாட்டான் வீரசோழ பெருமான் அடிகள் என அழைக்கப்பட்டார் .

மாற்றுக்கருத்துடைய சிலர் ராவணனின் முன்னோர்களான மாலி ,சுமாலி ,மகிமாலி ஆகியோர்கள் கட்டியதாகவும் ஸ்தல புராணக்கருத்துக்கள் கருத்துக்கள் உலவுகின்றது .இது ஆய்வுக்குரிய ஒன்றாகும் .

திருக்கோவில் அம்பாள் ஸ்ரீ மங்களாம்பிகை சன்னதி வலப்புறத்தில் உள்ளது. அம்பாள் அழகு சிலை வியக்கும் வண்ணம் அழகாக அமையப்பெற்றுள்ளது. பழங்கால வில்வமரம் கோபுரங்களின் அழகும் வியக்கவைக்கின்றன.

முடிவரை :
கி.பி 980 ல் கட்டப்பெற்ற ஸ்ரீ மகிமாலீஸ்வரர் திருக்கோவிலுக்கு தற்போது 1032 வருடங்கள் தாண்டி கோடிக்கணக்காணக்கான மக்கள் வணங்கி ஈரோடு மாநகரின் நடுவில் அமைந்த பழங்காலத்திய ஸ்ரீ மகிமாலீஷ்வரர் திருக்கோவில் வந்து வணங்கி சிவபெருமானின் பரிபூரண அருள் பெறுங்கள் .

Thursday, April 12, 2012

sri sokkanatchi amman temple.guruvareddiyur




ஸ்ரீ சொக்கநாச்சி அம்மன் திருக்கோவில் குருவரெட்டியூர்


திருக்கோவில் அமைவிடம் :

பாலமலையின் சாரலில் அமைந்துள்ள இலிப்பிலி ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் குருவரெட்டியூரில் இருந்து கோனார் பாளையம் செல்லும் வழியில் 3 கி.மீ சென்று ஆலமரத்துக்காடு என்ற ஊரின் அருகே அமைந்துள்ளது .

பழங்காலத்தில் குருவரெட்டியூர் மக்களின் கிராம தேவதையாக வணங்கப்படுகிற திருக்கோவிலாகும் .பழங்காலத்தில் திருக்கோவிலைக் காக்கும் ஆண்பெண் மினிகளை குருவரெட்டியூரில் இருந்து மண்ணால் ஆன மினிகள் சிலைகளை பூஜை செய்து நடக்க வைத்து திருக்கோவிலுக்கு கூட்டிச்சென்றதாக வரலாறு.

மூலவர் :

ஸ்ரீ சொக்கநாச்சி அம்மன் சுயம்பு மூர்த்தி உருவ அமைப்பில்லாத சிலையாக விளங்குகின்றது. முன்புறம் விநாயகர் சன்னதி அமைந்துள்ளது. திருக்கோவில் சுற்றி இரண்டு பெரிய ஆலமரங்கள் அருகே கரடிப்பட்டியூர் ஏரியின் பள்ளம் செல்கிறது. திருக்கோவில் பல காலமாக பராமரிப்பின்றி இருந்தது.

தற்போது ஆன்மீகப்பெரியோர்களின் முயற்சியால் திருக்கோவில் குண்டத்துடன் பூச்சாட்டு விழா துவங்க உள்ளது. பல கோவில்கள் சென்று எழுதினாலும் சிறிய
வயதில் இங்குள்ள ஆலமரத்தில் தூரிகை ஆடி விளையாடிய நாட்கள் மறக்க முடியாததாகும் .

ஸ்ரீ சொக்கநாச்சி அம்மன் திருக்கோவில் விழா ஆரம்பித்த பின் குருவரெட்டியூர் ஊர் மாரியம்மன் ஸ்ரீ சக்தி மாரியம்மன் பூச்சாட்டு விழா துவங்கும் .

நம் பகுதி வாழ் மக்கள் ஸ்ரீ சொக்கநாச்சி அம்மன் அருள்பெற அன்புடன் அழைக்கிறேன் .

Saturday, April 7, 2012

சிவனையும் சித்தர்களையும் தேடி சிவபயணம்




சதுரகிரியில் சித்தர்கள் பலரும் ஸ்ரீ சுந்தரமகாலிங்கத்தையும் ,ஸ்ரீ சந்தன மகாலிங்கத்தையும் தரிசித்தும் வரும் பக்தர்கள் சிலருக்கு காட்சி கொடுப்பதாகவும் நம்பப்படுவதால் சதுரகிரியை நோக்கி பக்தர்களும் அடியார்களும் பெளர்ணமி நாட்களில் வழிபடுகிறனர் .

சித்தர்களை சந்திக்கும் ஆசையிலும் ஸ்ரீ சுந்தரமகாலிங்கத்தை தரிசிக்கும் ஆசையிலும் நாமும் பயணத்தை தொடர்ந்தோம் . சதுரகிரியின் மலைப்பகுதியில் நடுப்பகுதியில் நாவல் ஊற்று கடந்து செல்ககையில் காவி உடையணிந்த வயதான பெண்மணியாரை சந்தித்தோம் .தனியாக நடந்து வந்த அவரை வணங்க அவர் "சிவாய நமஹ " பஞ்சாட்சர மந்திரத்தை உதிர்த்து ஆசிர்வதித்து கடந்து சென்றார் .

அவர் முகம் ஒளிரும் வண்ணமாக இருக்க சித்தரை கண்டு விட்டோம் என மனம் மகிழ்ந்தது. அடிமலையில் கிளம்பும் மலையில் பாதி தூரம் வரை இடப்பக்கம் சர சர வென சிறிய சப்தம் எங்களுடனேயே வந்தது மேலும் ஆச்சர்யம் கொள்ளச்செய்தது. ஸ்ரீ சுந்தர மகாலிங்கத்தை தரிசனம் செய்து திரும்புகையில் எதிரே காவியுடையில் திருநீரு கொடுத்து வாழ்த்தினார் .

ஆங்காங்கே சில நறுமணங்கள் நம்மிடையே வந்து செல்கின்றன.

பைரவர் :

சதுரகிரி வரும் பக்தர்களுக்கு வழி மறந்து வேறு எங்கும் சென்று விடாமல் இருக்க சித்தர்கள் சூட்சம உருவில் பைரவராக( நாய்) கூடவே வருகிறார் . நாங்கள் இறங்கி வரும்போது பாதி வழியில் எங்கு இருந்து வந்ததோ எங்களுடன் கூடவே பாதுகாப்பாக வந்து மறைந்து சென்றது . இரவில் தனியாக செல்கிற பக்தர்களுக்கு துணையாக வருகின்ற பைரவர்கள் மிகுந்த ஆச்சர்யம் தருகிறார்கள் .

பசுக்கள் :

வேண்டுதலுக்காக விடப்பட்ட பசுக்கள் இங்கு ஆங்காங்கே தென்படுகின்றது . ஸ்ரீ சுந்தரமகாலிங்கம் சன்னதியில் பூஜையின் போது பசுக்கள் நந்தீசராக பக்தர்களுடன் வந்து வழிபாடு செய்வது ஆச்சர்யமாகும் . நான் கண்ட சதுரகிரி பெளர்ணமி அம்மாவசை நாட்களில் அல்ல .

ஓர் மத்திம நாட்களில் தான் சதுரகிரியை உணர முடியும் . சதுரகிரி முதல் முறையாக செல்ல விரும்பும் பக்தர்கள் விஷேச நாட்கள் தவிர்த்து பிரதோஷ நாட்களில் தரிசனம் செய்யும் வண்ணம் சென்றால் நிறைய அனுபவங்களை உணரமுடியும் .

மரங்கள் :

செடிகளில் மலர்களை பார்ப்பது இயல்பு . மரங்களில் மலர்கள் பூப்பது ஆச்சர்யமாகுமாகும் .நான் சென்றபோது சிவப்பு,மஞ்சள் இளஞ்சிவப்பில் மரங்களில் பூக்களைக்கண்டோம் .

மூலிகைகள் :

இங்கு பல்வேறு மூலிகைகள் இருப்பதை உணரலாம் .கருநெல்லி போன்ற எங்கும் கிடைக்காத மூலிகைகள் இருப்பதாக சொன்னாலும் நாம் காட்டுக்குள் மிருகங்கள் இருப்பதால் செல்லகூடாது . சில மூலிகைகளையும் குங்கிலிய பிசினால் ஆன சாம்பிராணி தூள்கள் இங்குள்ள கடைகளில் விற்கிறார்கள் . மற்ற நாட்களில் சதுரகிரி வரும் பக்தர்கள் பூமாலைகள் , வில்வம் ,மற்றும் மலைக்கு மேலே வரும் வரை உணவு , குளுக்கோஷ் , கொண்டு வரவும் .

எல்லாநாட்களிலும் அன்னதானம் இட்டாலும் மலை ஏறும் வரை நீண்ட தூரத்தில் இருந்து வரும் பக்தர்கள் ஒரு வேளை உணவு கொண்டு வருதல் நலம் . இப்படி பல்வேறு ஆச்சர்யங்களை சுமந்து வரும் சதுரகிரியை சென்று மக்கள் கூட்டம் இல்லாத அமைதியான நாளில் வணங்கி சிவன் சித்தர்கள் ஆசி பெற்று உங்கள் வாழ்வில் மாற்றங்கள் ஏற்பட வாழ்த்துகிறேன்.

சதுரகிரியில் என் தேடல் பயணம் முடிவுறவில்லை. இன்னும் எழுதப்படாத இடங்கள் ,கதைகள் நிறைய உள்ளன. சதுரகிரியின் தேடல் தற்காலிகமாக இப்பதிவில் முற்றுப்பெற்றாலும் கூட மறுபடியும் தேடல் தொடரும் .

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...